ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: சஞ்சு சாம்சனின் மிரட்டல் இன்னிங்ஸ்... அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : March 1, 2026 at 11:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

அதன்பின் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களை சேர்த்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 40 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் ரோவ்மன் பாவெல் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோவ்மன் பாவெல் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 10 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 58 ரன்களை எட்டிய நிலையில், சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மாவும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது.

இதில் திலக் வர்மா 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெற கடைசி 10 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களமிறங்கிய ஷிவம் தூபே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் அழுத்தத்தை குறைத்தார்.

இறுதியில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்ஸரை விளாசி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 97 ரன்களையும் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

இதையும் படிங்க

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியும் அசத்தியுள்ளது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.