ETV Bharat / sports

சாதனைகளை குவிக்கும் வைபவ் சூர்யவன்ஷி: தென்னாப்பிரிக்க தொடரையும் வென்று இந்தியா யு19 அசத்தல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி (Getty)
author img

By ETV Bharat Sports Team

Published : January 6, 2026 at 12:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: தென்னாப்பிரிக்க யு19 அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய யு19 அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

எதிர்வரும் ஐசிசி ஆடவர் யு19 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய யு19 அணி தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க யு19 அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராவ்ல்ஸ் சதமடித்து அசத்தியதுடன் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 114 ரன்களைக் குவித்திருந்தார். இந்திய யு19 அணி தரப்பில் கிஷான் குமார் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க தாமதமானதன் காரணமாக, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 27 ஓவர்களில் 174 ரன்கள் என இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய யு19 அணிக்கு ஆரோன் ஜார்ஜ் மற்றும் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம் போல் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதேசமயம் மறுபக்கம் விளையாடி வந்த ஆரோன் ஜார்ஜ் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஒரு பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் 68 ரன்களைச் சேர்த்த கையோடு வைபவ் சூர்யவன்ஷியும் ஆட்டமிழந்தார். இறுதியில் வேதந்த் திரிவேதி 32 ரன்களையும், அபிக்யான் குண்டு 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன் மூலம் இந்திய யு19 அணி 23.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க யு19 அணியையும் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய யு19 அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் கடந்ததன் மூலம் ரிஷப் பந்தின் சாதனையும் முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி அண்ட19 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமை ரிஷப் பந்திடம் இருந்தது. அவர் கடந்த 2016ஆம் ஆண்டு யு19 உலகக் கோப்பை தொடரின் போது நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்ததே சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க

ஆனால் தற்சமயம் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் கடந்து அவருடைய சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக உலக லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்திருந்தார். தொடர்ந்து சாதனைகளைக் குவித்துவரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு எப்போது சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது