இங்கிலாந்திடம் படுதோல்வி; டி20 வரலாற்றில் மோசமான சாதனைகளை வாரிக்குவித்த இந்திய அணி!
இப்போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதே, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் அந்த அணி சந்தித்த மிகப் பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.


Published : July 8, 2026 at 11:08 AM IST
ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து, பல மோசமான சாதனைகளையும் படைத்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாகப் பாதியிலேயே ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 70 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் 202 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை இங்கிலாந்தின் பந்துவீச்சில் சீட்டுக் கட்டுப்போல சரிந்தது.
England win the 3rd T20I by 125 runs to lead the series 2-0.
— BCCI (@BCCI) July 7, 2026
Scorecard ▶️ https://t.co/jan4S8zsaV#TeamIndia | #ENGvIND pic.twitter.com/JKung77cru
அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், அக்ஸர் படேல் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய நால்வரைத் தவிர்த்து வேறெந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. இதன் காரணமாக இந்திய அணி வெறும் 11.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த படுதோல்வி காரணமாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சில மோசமான சாதனைகளையும் தன் வசம் ஆக்கியுள்ளது. அந்த வகையில், இப்போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதே, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் அந்த அணி சந்தித்த மிகப் பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.
அதேபோல், நேற்று இந்திய அணி எடுத்த 76 ரன்கள் என்பது, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ரன்களுக்கு சுருண்டதே இந்திய அணியின் மிகக்குறைந்த டி20 ஸ்கோராக இன்றளவும் நீடிக்கிறது.
மேலும், நேற்றைய போட்டியில் இந்தியா வெறும் 11.4 ஓவர்களில் (70 பந்துகள்) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மிகக் குறைந்த ஓவர்களில் ஆல்-அவுட் ஆன புதிய மோசமான சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது. முன்னதாக, 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11.5 ஓவர்களில் (71 பந்துகள்) ஆல்-அவுட் ஆனதே இந்தியாவின் முந்தைய மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ONE OF THE DARKEST DAYS IN INDIAN CRICKET HISTORY. ✍️
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 7, 2026
- For the first time ever remained win-less for 5 consecutive T20is.
- Lost a T20i by more than 100 runs for the first time ever.
- Got bowled out for just 76, their 2nd ever lowest total in T20is.
- Lost 5 wickets in… pic.twitter.com/87l3Zh6qqr
இதுதவிர, டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக இரண்டு தோல்விகளையும், இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்ய முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது.
இதையும் படிங்க: |
குறிப்பாக, கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா இலக்கைத் துரத்தும்போது அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ், இந்திய அணியின் இந்தத் தொடர் சரிவுகள் மற்றும் அணியின் சீரற்ற ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

