வான்கடேவில் ஜாம்பவான்களின் சங்கமம் - மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை ஜெர்ஸியை பரிசளித்த சச்சின்!
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சச்சின் டெண்டுல்கர் தனது கையொப்பமிட்ட 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

Published : December 15, 2025 at 10:47 AM IST
மும்பை: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மும்பை வான்கடே மைதானத்தில் நேரில் சந்தித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனும், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானுமான மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 'தி கோட் டூர்' நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி கலந்து வருகிறார்.
அந்த வகையில் டிசம்பர் 13ஆம் தேதி கொல்கத்தா வந்த மெஸ்ஸிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது. அங்கு அவர் தன்னுடைய 70அடி உயர உருவச்சிலையை திறந்து வைத்துடன், சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற தி கோட் டூர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இருப்பினும் அந்நிகழவில் அவர் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, ரசிகர்கள் வன்முறையில் இறங்கியதுடன், மைதானத்திலிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் மேலாளர் கைது செய்யப்பட்டதுடன், இதுகுறித்து விசாரிக்கை சிறப்பு விசாரணைக் குழுவையும் மேற்கு வங்க அரவு அமைத்துள்ளது.

அதன்பின் அன்று இரவு ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்றிருந்தார். அங்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடினார். மேலும் அவர் தனது கைப்யொப்பமிட்ட பந்துகளையும் ரசிகர்களுக்கு வழங்கி இருந்தார்.
மேற்கொண்டு இந்நிகழ்வின் போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய தினம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் சில நிமிடங்கள் உரையாடினர். அப்போது சச்சின் டெண்டுல்கர் தனது கையொப்பமிட்ட 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார். அதேபோல் லியோனல் மெஸ்ஸியும் உலகக் கோப்பை கால்பந்தில் கையொப்பமிட்டு சச்சினுக்கு பரிசாக வழங்கினார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெல்டுல்கர் 10ஆம் நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடியுள்ளார். மறுபக்கம் கால்பந்தில் லியோனல் மெஸ்ஸியின் ஜெர்ஸி எண்ணும் 10ஆகும். இதனால் மெஸ்ஸிக்கு தன்னுடையை ஜெர்ஸியை வழங்கி சச்சின் டெண்டுல்கர் கௌரவித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO | Maharashtra: Amid loud cheers, Indian cricket legend Sachin Tendulkar gifts Argentine football icon Lionel Messi the 2011 World Cup jersey, calling it a golden moment for Mumbai and India.
— Press Trust of India (@PTI_News) December 14, 2025
(Source: Third Party)
(Full VIDEO available on PTI Videos –… pic.twitter.com/GKIqReBoqa
இதையும் படிங்க: |
மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மெஸ்ஸி, அடுத்ததாக இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். மேலும் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

