ETV Bharat / sports

எஸ்ஏ20 லீக்: பேர்ஸ்டோவ், டி காக் அதிரடியில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி

எஸ்ஏ20 லீக் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் (கோப்புப்படம்) (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 6, 2026 at 11:12 AM IST

2 Min Read
Choose ETV Bharat

செஞ்சூரியன்: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ.20 லீக் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கானர் எஸ்டர்ஹுய்சன் மற்றும் பிரைஸ் பெர்சன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெர்சன்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்களிலும், விஹான் லுப் 21 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த எஸ்டர்ஹுய்சன் அரைசதம் கடந்து அசத்தினார்.

பின்னர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த கையோடு எஸ்டர்ஹுய்சனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸ், ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்டோரும் சோபிக்க தவறினர். இறுதியில் ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

இதன் மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு எதிரணி பவுலர்களை பந்தாடினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்தும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 14.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசி 79 ரன்களை எடுத்தார். மறுபக்கம் ஜானி பேர்ஸ்டோவ் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 85 ரன்களை சேர்த்தார்.

இதையும் படிங்க

இதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது குயின்டன் டி காக்கிற்கு வழங்கப்பட்டது. அதேசமயம், இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில், கேப்பிட்டல்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.