அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: கால்பந்து உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்குமா?
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.


Published : March 2, 2026 at 1:42 PM IST
ஹைதராபாத்: ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் ஆயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். தெஹ்ரானில் நடந்த வான் தாக்குதலில், காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். காமேனியின் இறப்பை ஈரானின் அரசு ஊடகமும் உறுதி செய்தது.
இதனையடுத்து ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் போர் பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இதுபேன்ற சூழ்நிலையில் தான் இந்தாண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் நடைபெற இருக்கும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஈரான் பங்கேற்பது சிக்கலாக மாறியுள்ளது.
ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருந்த ஈரான் அணி, குரூப்-ஜி பிரிவில் இடம் பிடித்திருந்தது. அதன்படி, அந்த அணி முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தையும், இரண்டாவது போட்டியில் பெல்ஜியத்தையும், மூன்றாவது ஆட்டத்தில் எகிப்பதையும் எதிர் கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்காவிற்கு சென்று ஈரான் அணி உலகக் கோப்பை தொடரில் விளையாடுமா என்ற கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் ஈரானை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஏற்கெனவே ட்ரம்ப் அரசு தடைவிதித்துள்ளதால், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வர்ஜேஷ்3 என்ற விளையாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ஈரான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், "இந்த தாக்குதலுக்கு பிறகு, நாங்கள் அமெரிக்கா சென்று கால்பந்து விளையாடுவதை யாராலும் கற்பனை செய்ய முடியாது. தற்போதைய சூழலில் ஈரான் அணி உலகக் கோப்பையில் விளையாடுமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க |
இதனால் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஈரான் அணி விளையாடாது என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினு, ஃபிஃபா அமைப்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை ஈரான் அணி இந்த தொடரிலிருந்து விலகும் பட்சத்தில், தரவரிசை அடிப்படையில் ஆசிய கண்டத்தில் இருந்து மற்றொரு அணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

