ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2025: வெற்றி பெற்றும் வெளியேறிய பாகிஸ்தான்; அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

பாகிஸ்தான் vs இலங்கை
பாகிஸ்தான் vs இலங்கை (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 28, 2026 at 10:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

பல்லகலே: இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று பல்லகலேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமான் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர்.

இதன் மூலம் இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய ஜோடி என்ற சாதனையையும் இவர்கள் படைத்தனர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஜமான் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 84 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் இரண்டு சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த அவர், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் சமன் செய்து அசத்தினார்.

பின்னர் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 100 ரன்களில் ஃபர்ஹான் இக்கெட்டை இழக்க, மேற்கொண்டு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், தசுன் ஷனகா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, கமில் மிஷாரா 26 ரன்களுக்கும், சரித் அசலங்கா 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய பவன் ரத்னாயக அதிரடியாக விளையாடி அரைசதத்தை பதிவு செய்ய, மறுமுனையில் விளையாடிய கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜனித் லியானகே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அவருடன் இணைந்த கேப்டன் தசுன் ஷனகாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இதில் பவன் ரத்நாயக 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் தசுன் ஷன்கா 24 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இறுதிவரை போராடிய தசுன் ஷனகா 2 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 76 ரன்களை செர்த்தார்.

இதையும் படிங்க

இதன் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.