ETV Bharat / sports

சையத் முஷ்டாக் அலி கோப்பை: மத்திய பிரதேசத்தை ஒரு ரன்னில் வீழ்த்தி ஜார்கண்ட் த்ரில் வெற்றி

மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இஷான் கிஷன் (கோப்புப்படம்)
இஷான் கிஷன் (கோப்புப்படம்) (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : December 15, 2025 at 10:48 AM IST

2 Min Read
Choose ETV Bharat

புனே: மத்திய பிரதேச அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் சூப்பர் லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஜார்கண்ட் அணிக்கு கேப்டன் இஷான் கிஷன் - விராட் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விராட் சிங் 14 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய குமார் குஷாக்ராவும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 63 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அனுகுல் ராய் 29 ரன்களையும், ராஜந்தீப் சிங் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து, மற்ற வீரர்களால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதன் காரணமாக ஜார்கண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. மத்திய பிரதேச அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணியில் வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களில் நடையைக் கட்டினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்ஷ் கௌவாலி - ஹர்பிரீத் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் ஹர்ஷ் கௌவாலி 61 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதாரும் 16 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஹர்பிரீத் சிங் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 77 ரன்களை சேர்க்க, மத்திய பிரதேச அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இன்னிங்ஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட அனிகெத் வெர்மா ரன்களை எடுக்கும் முயற்சியில் ரன் அவுட்டாகினார். இதன் காரணமாக மத்திய பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஜார்கண்ட் அணி தரப்பில் ஷுஷாந்த் மிஸ்ரா, பால் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையும் படிங்க:

  1. உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
  2. 3வது டி20 போட்டி; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

இதன் மூலம் ஜார்கண்ட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. மேலும் இந்த போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.