ETV Bharat / sports

ரஞ்சி கோப்பை 2026: கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடிய ஜம்மு காஷ்மீர்

நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிகாக் இந்த சீசனில் மொத்தமாக 60 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபி தார் தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஜம்மு காஷ்மீர் அணி
ஜம்மு காஷ்மீர் அணி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 28, 2026 at 2:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹுப்லி: ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் முதன்மையானது ரஞ்சி கோப்பை. இத்தொடரின் 2025-26ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்த்து, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜம்மு காஷ்மீர் அணி பலப்பரீட்சை நடத்தியது.

ஹுப்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக அந்த அணியில் ஷுபம் சதம் விளாசியதுடன் 121 ரன்களை சேர்த்தார். மேற்கொண்டு யாவர் ஹசன், அப்துல் சமத், கன்ஹையா வாதவன் மற்றும் கேப்டன் பராஸ் தோக்ரா உள்ளிட்டோர் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி 584 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அணியில் முன்னாள் கேப்டன் மயங்க் அகர்வால் பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தியதுடன், 160 ரன்களையும் சேர்த்தார். அதேசமயம் மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அதிலும் குறிப்பாக கிருத்திக் கிருஷ்ணா(36), ஸ்ரேயாஸ் கோபால் (27) ஆகியோரை தவிர்த்து எந்த வீரரும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. இதன் காரணமாக கர்நாடகா அணி 293 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதுடன், ஃபாலோ ஆனும் ஆனது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி தர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி 291 ரன்கள் முன்னிலையும் பெற்றிருந்தது.

இருப்பினும் ஃபாலோ ஆன் கொடுக்க மறுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் அணியில் யவர் ஹசன், ஷுபம், கேப்டன் பராஸ் தோக்ரா உள்ளிட்டோர் சொற்ப ரன்களிலும், அப்துல் சமத் 32 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் காம்ரன் இக்பால் மற்றும் சாஹில் லோத்ரா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்ரன் இக்பால் சதம் விளாச, அவரைத் தொடர்ந்து சாஹில் லோத்ராவும் சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காம்ரன் இக்பால் 16 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 160 ரன்களையில், சாஹில் லோத்ரா 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 101 ரன்களையும் சேர்த்ததன் காரணமாக ஜம்மு அணி 342 ரன்களையும் குவித்திருந்தது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் அணி கேப்டன் பராஸ் தோக்ரா இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தார். பின்னர் கடைசி ஒரு செஷன் மட்டுமே மீதமிருந்த காரணத்தால் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் அணி முன்னிலை வகித்ததன் காரணமாக, போட்டியின் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க

இதன் மூலம் நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதனை படைத்துள்ளது. ஏனெனில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஜம்மூ காஷ்மீர் அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். இந்த போட்டியில் சதம் விளாசிய ஷுபம் ஆட்ட நாயகன் விருதையும், ஆகிப் நபி தார் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.