ETV Bharat / sports

பிப்ரவரி 14 முதல் தொடங்கும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா

இனி வரும் காலங்களில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரை அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் கோப்பை
ஐஎஸ்எல் கோப்பை (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 7, 2026 at 11:57 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க ஐபிஎல் இருப்பது போல், கால்பந்து விளையாட்டின் ரசிகர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இதில் 11 சீசன்கள் நடைபெற்ற நிலையில், அதிகபட்சமாக கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட ஏடிகே அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இதுதவிர சென்னையின் எஃப்.சி. மற்றும் மோகன் பாகன், மும்பை சிட்டி எஃப்.சி. அணிகளும் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளனர். இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனிடையே ஐஎஸ்எல் தொடரில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 2025-26ஆம் ஆண்டிற்கான சீசன் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் ஐஎஸ்எல் தொடரை நடத்துவது குறித்து நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடங்கப்பட்டன. இதனால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டதுடன், கால்பந்து விளையாட்டு வீரர்களின் வாழ்வாதாராமும் பாதிக்கப்படும் சூழல் உருவாப்து. மேலும் இந்திய கால்பந்து விளையாட்டை காப்பாற்ற வேண்டும் என வீரர்கள் காணொளி மூலம் வேண்டுகோள் விடுத்த நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.

இதற்கிடையே இப்பிரச்சனையில் மத்திய அமைச்சகம் நேரடியாக தலையிட்டதுடன், ஐஎஸ்எல் நிர்வாகம், அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் இந்திய கால்பந்து கூட்மைப்பு ஆகியோருடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது. இந்த நிலையில் ஐஎஸ்எல் தொடரை நடத்துவது குறித்து பல மாதங்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான ஐ.எஸ்.எல் சீசனானது எதிர்வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், இந்த தொடரில் மோகன் பாகன், ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எஃப்.சி., சென்னையின் எஃப்.சி. உள்ளிட்ட மொத்தம் 14 அணிகள் விளையாடும் நிலையில், மொத்தமாக 91 போட்டிகள் நடத்தப்படும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.

இதையும் படிங்க

மேலும் லீக்கிற்காக ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 சதவீதம் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு வழங்கும் என்றும், கிளப்புகள் தங்கள் உரிமையாளர் கட்டணமான ரூ.1 கோடியை செலுத்த ஜூன் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்கள் வேலைகளை தொடங்கியுள்ளன.