ETV Bharat / sports

மகளிர் டி20 கிரிக்கெட்: இந்திய மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.

இங்கிலாந்து vs இந்தியா
இங்கிலாந்து vs இந்தியா (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 31, 2026 at 1:33 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளதுடன், 1-0 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சோஃபியா டங்க்லி 10 ரன்களிலும், டேனியல் வையட் ஹாட்ஜ் 29 ரன்களிலும், ஏமி ஜோன்ஸ் 28 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபிரேயா கெம்ப் 39 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை சேர்த்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரீசாரணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

இதில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 32 ரன்களை சேர்த்த கையோடு ஸ்மிருதி மந்தனாவும் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய யஷ்திகா பாட்டியா சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 33 ரன்களை எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் களத்தை விட்டு வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் சோபிக்கத் தவறினர்.

இதையும் படிக்கவும்

இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், சார்லீ டீன், ஃபிரேயா கெம்ப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன் செய்துள்ளது.