ETV Bharat / sports

17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் டாமி பியூமண்ட்

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற சாதனையை டாமி பியூமண்ட் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாமி பியூமண்ட்
டாமி பியூமண்ட் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : July 9, 2026 at 3:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட், தனது 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று முடிந்தது. இதில் பங்கேற்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. இதையடுத்து இந்திய மகளிர் அணி தங்களின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடரவுள்ளது.

கடந்த மே மாதம் இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய மகளிர் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவதாக இருந்தது. இதில் டி20 தொடர் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது, நாளை (ஜூலை 10) முதல் நடைபெறவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்ற பெருமை இதற்கு இருப்பதால், இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஏனெனில், கடந்த 1976ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் மகளிர் ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஆனால், மகளிர் டெஸ்ட் போட்டி இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்டதே இல்லை. இந்த நிலையில், இந்த புகழ்பெற்ற மைதானத்தில் நடைபெறும் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இது என்பதால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை டாமி பியூமண்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இது என்பதால், தனது ஓய்வுக்கு இதுவே மிகச்சரியான தருணம் என்று பியூமண்ட் தெரிவித்துள்ளார்.

தனது ஓய்வு முடிவு குறித்துப் பேசிய பியூமண்ட், "ஏறத்தாழ 17 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். நான் சிறுமியாக இருந்த காலம் தொட்டே கிரிக்கெட்டை நேசித்து விளையாடி வருகிறேன். ஆனால், அச்சமயத்தில் இங்கிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது அடுத்த தலைமுறை வீராங்கனைகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைப்பதற்கான நேரம் வந்துவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காகக் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டாமி பியூமண்ட், அந்த அணியின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகப் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக, 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த அவர், அந்தத் தொடரில் 410 ரன்கள் குவித்து தொடர் நாயகி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் (12 சதங்கள்) அடித்த வீராங்கனை என்ற சாதனையையும், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த இங்கிலாந்தின் இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, 2023 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 208 ரன்கள் குவித்து, மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க:

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 140 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பியூமண்ட், 12 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 4,738 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல், 109 டி20 போட்டிகளில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1,975 ரன்களையும், 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதங்கள் என 612 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில், தனது ஓய்வை அறிவித்துள்ள டாமி பியூமண்டிற்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.