ETV Bharat / sports

அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்கள் - 'காமன்வெல்த் நாயகன்' ராஜா முத்துப்பாண்டி அரசுக்கு கோரிக்கை

காமன்வெல்த் பளுதூக்குதலில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு, மத்திய விளையாட்டுத் துறை சார்பில் ரூ. 20 லட்சமும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி
தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : August 5, 2026 at 3:34 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, இந்த முறை பல முக்கிய விளையாட்டுகள் காமன்வெல்த் தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும், இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களைக் குவித்து, ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, பளுதூக்குதலில் இந்தியா 6 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது. இதில் ஆடவர் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பான இப்போட்டியில், ஸ்நாட்ச் முறையில் 126 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 160 கிலோ என மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி அவர் இரண்டாமிடம் பிடித்து அசத்தினார்.

அதே சமயம், இப்பிரிவில் மலேசிய வீரர் அஸ்னில் பின் பிதின் முகமது 299 கிலோ எடையைத் தூக்கிக் காமன்வெல்த் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. மேலும், அவரது சாதனையைப் பாராட்டி மத்திய விளையாட்டுத் துறை சார்பில் ரூ. 20 லட்சமும், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சொந்த ஊர் செல்லச் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராஜா முத்துப்பாண்டி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நான் வென்ற இந்த வெள்ளிப் பதக்கத்தை எனது பெற்றோருக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மலேசிய வீரர் அஸ்னில் பின் பிதின் முகமது எனக்குச் சவாலான போட்டியாளராக இருந்தார்.

இதையும் படிங்க:

எனது சாதனையை அங்கீகரித்து ரூ. 20 லட்சம் பரிசு அறிவித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும், ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழகத்தில் உள்ள இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து, இப்போட்டியை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பளுதூக்குதல் பயிற்சி மையங்களை தமிழக அரசு அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.