தேசிய அளவிலான அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் 2026: ஓசூரில் இன்று துவக்கம்
ஓசூரில் நடைபெற்று வரும் தேசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Published : February 25, 2026 at 6:00 PM IST
கிருஷ்ணகிரி: 13ஆவது தேசிய அளவிலான அமைச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று முதல் தொடங்கி மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 13ஆவது தேசிய அளவிலான அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் இந்த தொடரானது தனியார் பொறியியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சதுரங்க கழக தலைவர் டாக்டர் மாணிக்கம், பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி மற்றும் முன்னாள் தலைவர் டி.வி. சுந்தர் ஆகியோர் பங்கேற்று, போட்டிகளை தொடக்கி வைத்தனர். இந்த தொடரானது இன்று தொடங்கி மார்ச் 1ஆம் தேதி வரை ஆறு பிரிவுகளில் நடைபெறவுள்ளது. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள், சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்பதற்காக தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க கழக நிறுவன தலைவர் ஜெயபால சண்டாடி," இந்த தேசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கோவா, மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து வயதுப் பிரிவு வீரர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 1040 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க |
அதன்பின் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் லோகேஷ், "இந்தியா முழுவதிலும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தால், செஸ் அகாடமி போன்ற திட்டங்கள் மூலம் விளையாட்டு வீரர்கள் பெரிதும் ஊக்கவிக்கப்படுகிறார்கள். குறிப்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இப்போட்டிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த பிரம்மாண்ட நிகழ்வு ஓசூரில் நடத்தப்படுவது பெருமைக்குரியது" என்று தெரிவித்தார்.

