14 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் கல்லீரலுக்கு குஷி தான்! காரணம் என்ன தெரியுமா?
ஆரம்பத்தில் மூன்று நாட்கள் சர்க்கரை க்ரேங்கிஸ் இருந்தாலும், பின்னர் உடல் கொழுப்பை எரிபொருளாக பயன்படுத்த தொடங்கும். இதனால் அடிக்கடி பசி எடுப்பது குறையும்.

Published : January 6, 2026 at 11:24 AM IST
'நோ சுகர் டயட்' (No Sugar Diet) இந்த வார்த்தை இன்று ஆரோக்கியத்தின் அடையாளமாக மாறிவருகிறது. உடல் பருமனை குறைக்க விரும்புவோர், பொலிவான சருமத்தை எதிர்பார்ப்போர் மற்றும் நீரிழிவு நோயாளிகள் எனப் பலரும் இன்று சர்க்கரையை தவிர்த்து வருகின்றனர்.
நாக்கிற்கு இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்குள் ஒரு 'மெதுவான நஞ்சாக' (Slow Poison) செயல்படுகிறது. நாம் உணவில் சேர்க்கும் வெள்ளை சர்க்கரை வெறும் சுவையை தாண்டி, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை என பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, நவீன காலத்தில் நாம் உட்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மறைந்திருக்கும் சர்க்கரை, கல்லீரலில் தேவையற்ற கொழுப்பாக படிந்து (Fatty Liver) பல ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. இப்படியிருக்க, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பிரபல இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி வெறும் 14 நாட்கள் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் நமது உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சர்க்கரையை 14 நாட்கள் முழுமையாக தவிர்த்த முதல் முதல் நாளிலிருந்தே உடல் எப்படி மாறுகிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
முதல் இரண்டு நாட்கள் (நாள் 1 - 2): சர்க்கரையை நிறுத்திய உடனேயே மாற்றங்கள் தொடங்குகின்றன. கல்லீரலுக்குச் செல்லும் 'ஃபிரக்டோஸ்'அளவு குறைகிறது. இதனால் கல்லீரலில் புதிய கொழுப்பு உருவாவது (Hepatic fat production) உடனடியாக குறைகிறது. எடையை குறைப்பதற்கு முன்பே, உடலின் இன்சுலின் உணர்திறன் மேம்பட தொடங்குகிறது.
முதல் வாரம் (நாள் 3 - 7): இந்த காலகட்டத்தில் கல்லீரலில் உள்ள சர்க்கரையின் சுமை (Hepatic sugar load) பெருமளவு குறைகிறது. உடலில் வீக்கத்தை உண்டாக்கும் சமிக்ஞைகள் குறைய தொடங்குகின்றன. இந்த மாற்றங்கள் ரத்த பரிசோதனையில் உடனடியாக தெரியாவிட்டாலும், கல்லீரலின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
இரண்டாம் வாரம் (நாள் 8 - 14): இரண்டாவது வாரத்தில் மாற்றங்கள் இன்னும் தீவிரமடைகின்றன. ரத்தத்தில் உள்ள 'டிரைகிளிசரைடுகள்' (Triglycerides - கெட்ட கொழுப்பு) குறைகின்றன. வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு சீராகிறது. முக்கியமாக, வயிற்று உப்புசம் குறைந்து, உள்ளுறுப்புகளில் தேங்கியுள்ள கொழுப்பு குறைய தொடங்குகிறது. கல்லீரல் தன்னிடமுள்ள கொழுப்பை வெளியேற்றும் வேகமும் குறைகிறது. இது தவிர,
மூளைத்திறன் மற்றும் கவனம் அதிகரித்தல்: சர்க்கரை அதிகம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அடிக்கடி ஏறி இறங்கும். இது மூளையில் ஒருவித மந்தநிலையை (Brain Fog) ஏற்படுத்தும். சர்க்கரையை தவிர்த்த சில நாட்களிலேயே, மனத்தெளிவு, சிறந்த கவனம் மற்றும் நினைவாற்றல் அதிகரிப்பதை உணர முடியும்.
சிறுநீரக செயல்பாடு மேம்படுதல்: சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்போது, ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரக வடிகட்டிகள் மீதான அழுத்தம் குறைகிறது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த நாளங்கள்: சர்க்கரை ரத்த நாளங்களில் வீக்கத்தை உண்டாக்கும். 14 நாட்கள் சர்க்கரை இல்லாமல் இருக்கும்போது, தமனிகளில் உள்ள வீக்கம் குறைந்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறது. கூடுதலாக,
- ஆரம்பத்தில் மூன்று நாட்கள் சர்க்கரை க்ரேங்கிஸ் இருந்தாலும், பின்னர் உடல் கொழுப்பை எரிபொருளாக பயன்படுத்தத் தொடங்கும். இதனால் அடிக்கடி பசி எடுப்பது குறையும்.
- உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறுவதால், கை, கால் மற்றும் முகம் பொலிவு பெறுவதோடு, உடல் எடையும் குறைய தொடங்கும்.
- ரத்தத்தில் இன்சுலின் அளவு சீராவதால் முகப்பருக்கள் குறைந்து சருமம் ஆரோக்கியமாக மாறும்.
- சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்கள் இல்லாததால், ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
டாக்டர் சேத்தி பரிந்துரைப்பது போல, காபி அல்லது டீ குடிக்கும்போது சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது அதன் முழு நன்மையையும் நமக்குத் தரும். சர்க்கரைக்கு மாற்றாக பழங்கள், நட்ஸ் மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது கல்லீரலை நச்சுகளில் இருந்து பாதுகாக்க உதவும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

