ETV Bharat / international

அந்த பச்சை வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? - நேபாள பெருவெள்ளத்தில் இந்த குடும்பம் தப்பியதா?

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், சுற்றி இருந்த அனைத்து வீடுகளையும் அடித்துச் சென்றபோதும் அந்த பச்சை நிற வீடு அரணாக இருந்து அந்த குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளது.

வெள்ளத்தில் தப்பிய வீடு, (வெள்ளத்திற்கு முன்பும் - பிறகும்)
வெள்ளத்தில் தப்பிய வீடு, (வெள்ளத்திற்கு முன்பும் - பிறகும்) (X/@Deb_livnletliv)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 9:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

நேபாளத்தில் மலைபோல வந்த வெள்ளத்தில், அந்த பச்சை நிற வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. வீட்டைச் சுற்றிலும் அச்சமூட்டும் அளவுக்கு வந்த வெள்ளம், அந்த வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு உயிருக்கு போராடுகிறது ஒரு குடும்பம்.

இந்த காட்சியை பார்க்கும் எவரும் அதிர்ச்சியில் உறைந்து விடுவார்கள். பார்ப்பவர்களுக்கே இந்ந நிலை என்றால், அந்த வீட்டில் இருப்பவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

சுற்றிலும் வாகனங்கள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து, அந்த பச்சை நிற வீட்டில் இருப்பவர்கள் உயிர் பிழைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஒரு சதவீதம் கூட எவருக்கும் வந்திருக்காது. ஆனால், அந்த வீட்டின் பால்கனியில் தவித்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். அதற்கு காரணம், அந்த வீட்டின் கட்டுமானம். அந்த பச்சை நிற வீடு, உறுதியான கட்டுமானத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் தொடர்பாக இணையத்தில் பரவிய வீடியோக்களில், அந்த வீடியோ சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஏனென்றால், அந்த வீடியோவில், வெள்ளப் பெருக்கில் இடிந்து விழுந்த வீடுகள், மிதக்கும் சடலங்கள், மறைந்து போன பகுதிகளே முக்கிய காட்சியாக இருந்தன.

சீறிப்பாய்ந்து ஓடும் சேறு கலந்த வெள்ளத்துக்கு நடுவே, அந்த பச்சை நிற வீட்டையும், அதன் பால்கனியில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வைரலாகின.

சுற்றியிருந்த கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டபோதிலும், சீறிப்பாயும் வெள்ளத்துக்கு மத்தியில் அந்த பச்சை நிற வீடு உறுதியாக நின்றது. அந்த வீடியோவை பார்த்த பலர், அந்த வீட்டுக்குள் இருப்பவர்களை பற்றி கவலைப்பட்டதுடன் அவர்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்தனர்.

அந்த வீடியோ இணையத்தில் பரவிய அடுத்த சில தினங்களில், அந்த வீட்டில் இருந்தவர்கள் பிழைத்துக் கொண்டதை உறுதிப்படுத்தும் புதிய வீடியோ வெளியாகி உள்ளது.

முந்தைய வீடியோவை எக்ஸ் தளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்து பலரும் கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். "இதுபோன்ற காட்சிகளைத் திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும்" என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க.. பரந்தூருக்கு மாற்றாக ஓசூர்? - புதிய விமான நிலையம் அமைப்பதை கர்நாடகா எதிர்க்குமா?

"வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும்? இவ்வளவுதான் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்தார்களா? அல்லது யாரேனும் உயிர் பிழைத்தால் என்ன செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்களா? அவர்களை யாராவது நேர்காணல் செய்ய வேண்டும்" மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

"அந்த வீட்டை வடிவமைத்த பொறியாளருக்கு ‘தேசிய விருது’ வழங்கப்பட வேண்டும்" என்று மற்றொருவர் பரிந்துரை செய்துள்ளார்.

"மிகப்பெரிய பெருவெள்ளத்திற்கு மத்தியிலும் இந்த வீடு உறுதியாக நிற்பது, வலுவான கட்டுமானத்திற்கு ஒரு சான்று என்று ஒருவரும், "அந்தக் கட்டடத்தைக் கட்டியவருக்குப் பாராட்டுகள்," என்று ஒருவரும் குறிப்பிட்டுள்ளனர்.