ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு - இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு
முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர்.

Published : August 31, 2026 at 11:07 PM IST
பிஷ்கெக் (கிர்கிஸ்தான்): ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷாவ்கெட் மிர்ஸியோயேவை சந்தித்து இருதரப்பு உறவு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிஷ்கெக் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தும், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம், மேற்காசிய சூழல், கச்சா எண்ணெய் விவகாரம், இருநாட்டு வர்த்த உறவுகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக ரஷ்ய-உக்ரைன் போர் தொடர்பாக இருவரும் நீண்ட ஆலோசனை மேற்கொண்டனர்.
குறிப்பாக மாநாட்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், முடிவில்லாமல் தொடரும் உக்ரைன் போரை, தற்போது முடிவுக்கு கொண்டுவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனை ரஷ்யா கவனத்தில் கொண்டு போர் நிறுத்தம் தொடர்பான வழிமுறைகளை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதே மனித குலத்தின் கூட்டு முன்னுமையாக இருக்கும். போரின் ஒவ்வொரு நாளும் மனித குலம் பின்னோக்கி இழுக்கப்பட்டு வருகிறது. அதை நாம் அனுமதிக்க கூடாது. காந்தி, புத்தர் பிறந்த இந்திய மண், அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கும்" என்றார்.
மேலும் கடந்த ஆண்டு புதின் இந்தியா வந்ததை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இருதரப்பு ஒத்துழைப்பு புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், இருநாட்டு மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவது மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர்.
இதனிடையே அடுத்த மாதம் டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதில் புதின் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

