வங்கதேசத்தில் தொடரும் வன்முறை - இந்து பத்திரிகையாளர் தலையில் சுட்டுக்கொலை
பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published : January 6, 2026 at 11:10 AM IST
டெல்லி: வங்கதேசத்தில் இந்து பத்திரிகையாளர் மர்மநபர்களால் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள இந்துகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேச நாட்டில் குல்னா கோட்டம் கேசப்பூர் உபாசிலா ஜெசோர் பகுதியில் உள்ள அருவா கிராமத்தை சேர்ந்தவர் ராணா பிரதாப் பைராகி (38). இவர் மொனிராம்பூர் பகுதியில் உள்ள கொபாலியா பஜாரில் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும் ’dainik BD Khabar' என்ற தினசரி பத்திரிகையில் பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்று வங்காள மொழி நாளிதழான ’prothom alo’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஜெசூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்களால் ராணா பிரதாப் பைராகி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணிக்கு நடைபெற்றதாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அபூல் பசார் கூறியதாக வங்கதேச தனியார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்து மதத்தை சேர்ந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து மொனிராம்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பைராகி தலையில் மூன்று முறை சுடப்பட்டதாக மொனிராம்பூர் காவலர் முகமது ரஜியுல்லா கான் தெரிவித்துள்ளார். மேலும் பைராகி தடை செய்யப்பட்ட புர்போ பங்களார் எனும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக வங்கதேச நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதன் காரணமாக அவரது ஆட்சி கவிழ்ந்தது.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு மக்கள் புரட்சி வெடித்தது. இதற்கு 'இன்குலாப் மான்சா' எனும் மாணவர் அமைப்பின் தலைவரான ஷரீப் உஸ்மான் ஹாடி தலைமை வகித்தார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கதேசத்தை மீட்க வேண்டும் என்பதை பிரதான முழக்கமாக கொண்டிருந்த ஷரீப் உஸ்மான் ஹாடி, பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹாடியின் மரணத்துக்கு இந்தியா தான் காரணம் என அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும் வங்கதேச கலவரத்தில், இந்தியாவை சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.
| இதையும் படிங்க: ஹைதராபாத் ஐடி பெண் ஊழியர் அமெரிக்காவில் படுகொலை; தமிழ்நாட்டுக்கு பறந்து வந்த நபரை சுற்றி வளைத்த இன்டர்போல் |
அவரைத்தொடர்ந்து ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகொன் சந்திர தாஸ் (50) கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதன் காராணமாக இரு நாடுகளுக்கு இடையே இணக்கமற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு வங்கதேச நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 13.13 மில்லியன் ஹிந்துக்கள் அங்கு வசித்து வருகின்றனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7.95 சதவீதமாகும்.

