ETV Bharat / health

அடிக்கடி வாய் புண் வருதா? நிரந்தரமாக குட்பை சொல்ல இதை ஃபாலோ பண்ணுங்க!

குடல் சார்ந்த நோய்கள் அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதும் வாய் புண் வரலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : September 1, 2026 at 11:08 AM IST

3 Min Read
Choose ETV Bharat

நமக்கு திடீரென வாய் புண் வந்துவிட்டால், 'உடம்பு சூடு அதிகம், நிறைய தண்ணீர் குடி' என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திக்கும் மிக சாதாரணமான ஒரு பிரச்சனை தான் இந்த வாய் புண். ஆனால், இது வந்துவிட்டால் உணவை சாப்பிட முடியாது. பேசுவதற்கும் சிரமமாக இருக்கும்.

பொதுவாக வாய் புண்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தானாகவே குணமாகிவிடும். இருந்தாலும், இது எதனால் வருகிறது என்பதையும், அதை எவ்வாறு தடுப்பது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

மக்கள் பலரும் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த வாய் புண்ணால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, இளைஞர்களுக்கு இது அடிக்கடி வருகிறது. சிலருக்கு எப்போதாவது வரும். சிலருக்கு மாதந்தோறும் வந்து தொந்தரவு தரும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் அல்ல. உயிருக்கு ஆபத்தானதும் அல்ல. இருந்தாலும், அது ஏற்படுத்தும் வலி அன்றாட நிம்மதியை கெடுத்துவிடும்.

காரணம் என்ன?

உடலில் சூடு அதிகரிப்பது மட்டுமே இதற்கு மீறி, வேறு பல அன்றாட காரணங்களும் உள்ளன,

  • அவசரமாக உணவு உட்கொள்ளும்போது தெரியாமல் கன்னத்தின் உட்பகுதியை கடித்துக்கொள்வது, கடினமான டூத் ப்ரஷ்ஷால் ஈறுகளை காயப்படுத்துவது, பற்களில் பொருத்தப்பட்டுள்ள கிளிப்புகள் அல்லது செயற்கை பற்கள் உராய்வது போன்றவற்றால் புண்கள் ஏற்படும்.
  • அளவுக்கு அதிகமான காரம், உப்பு மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகள் வாயின் உட்புறச் சவ்வை எரிச்சலடையச் செய்து புண்ணை உண்டாக்கும்.
  • அதிகப்படியான மன அழுத்தம், உடல் சோர்வு, சரியான தூக்கமின்மை மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய் புண்ணிற்கு முக்கியக் காரணங்களாகும்.
  • உடலில் இரும்புச்சத்து, துத்தநாகம் (Zinc), போலேட், வைட்டமின் B மற்றும் வைட்டமின் D ஆகிய ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும்போது வாய் புண்கள் அடிக்கடி தோன்றும்.
  • குடல் சார்ந்த நோய்கள் அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதும் வாய் புண் வரலாம். இது போன்ற நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையோடு ரத்தப் பரிசோதனை செய்து சரியான சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.
  • வீக்கத்தை குறைக்கும் மாத்திரைகள், ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் மற்றும் ஆஸ்துமாவுக்கான மருந்துகள் சிலருக்கு பக்கவிளைவாக வாய் புண்ணை ஏற்படுத்தக்கூடும்.
  • புகைப்பிடிக்கும் பழக்கத்தை திடீரென நிறுத்துபவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களில் வாய் புண் வர வாய்ப்புள்ளது. உடல் தன்னைத்தானே சீரமைத்து கொள்ளும்போது ஏற்படும் தற்காலிக விளைவே இதுவாகும். ஒரு மாதத்திற்குள் இது தானாகவே சரியாகிவிடும்.
  • சிலருக்கு வாய் புண் ஆறும். ஆனால் குறுகிய காலத்தில் மீண்டும் வந்துவிடும். உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வாயின் உட்பகுதியை அளவுக்கு அதிகமாக பாதிப்புக்கு உள்ளாக்குவதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

குணமாக என்ன செய்வது?

வாய் புண்ணை ஒரே நாளில் உடனடியாக குணப்படுத்த இயலாது என்றாலும், வலியைக் குறைத்து புண் விரைவாக ஆற சில வழிகள் உள்ளன:

  • லேசான சூடான நீரில் சிறிது உப்பு கலந்து வாயை கொப்பளித்தால் வலியும் வீக்கமும் உடனடியாகக் குறையும்.
  • மருந்தகங்களில் கிடைக்கும் அனஸ்தெடிக் ஜெல் அல்லது ஸ்ப்ரேக்களை புண் உள்ள இடத்தில் தடவினால், அந்த இடம் தற்காலிகமாக மரத்துப் போய் உணவு உண்பது எளிதாகும்.
  • கிருமி நாசினி அல்லது வீக்கத்தை குறைக்கும் மவுத்வாஷ்களை பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம்.
  • பல பல்பேஸ்ட்களில் நுரைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 'சோடியம் லாரில் சல்ஃபேட்' (Sodium Lauryl Sulfate - SLS) என்ற வேதிப்பொருள் சிலருக்கு வாய் புண்ணை அதிகரிக்க செய்யும். SLS இல்லாத பல்பேஸ்ட்டைப் பயன்படுத்துவது நல்லது.
  • புண் ஆறும் வரை காரமான, புளிப்பான மற்றும் மொறுமொறுப்பான கடினமான உணவுகளை தவிர்த்துவிட்டு, மென்மையான உணவுகளையும், குளிர்ந்த திரவ உணவுகளையும் உட்கொள்வது நல்லது.

வராமல் தடுக்கும் முறைகள்

மிருதுவான பிரஷ்ஷை பயன்படுத்துவது, பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, காய்கறிகள் நிறைந்த சத்தான உணவை உட்கொள்வது மற்றும் போதுமான தூக்கம் ஆகியவையே வாய் புண் வராமல் தடுக்கும் எளிய வழிகளாகும்.

சாக்லேட், காபி, கொட்டைகள் (Nuts), தக்காளி போன்ற குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்ட பிறகு புண் வருவதாக உணர்ந்தால், அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உங்கள் வாயில் உள்ள புண் மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆறாமல் இருந்தாலோ, அல்லது வித்தியாசமாக தெரிந்தாலோ அலட்சியமாக இருக்க கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் அரிதாக வாய் புற்றுநோய் போன்ற தீவிரமான பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.

வாய் புண் சிறிய பிரச்சனைதான் என்றாலும், சரியான உணவுமுறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் அதை எளிதாகத் தடுத்துவிட முடியும்.

ஆய்வு:

https://pubmed.ncbi.nlm.nih.gov/15370162/

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4441245/

இதையும் படிங்க:

எந்த சத்து மாத்திரையை எந்த நேரத்தில் சாப்பிடணும்? முழு பலனை பெற இதை தெரிஞ்சுக்கோங்க!

கட்டி Vs தூள் பெருங்காயம்: எது நல்லது? ஒரிஜினல் பெருங்காயத்தை கண்டுபிடிக்க 3 டிப்ஸ்!