சர்க்கரை நோயை 'சைக்கிள்' ஓட்டி விரட்டிய ஹோமியோபதி மருத்துவர்! எப்படி தெரியுமா?
சர்க்கரை நோய் வரும் வரை காத்திருக்காமல், தனது அன்றாட பழக்கவழக்கங்களில் மருத்துவர் கொண்டு வந்த சிறிய மாற்றங்கள், இன்று அவரை ஒரு சிறந்த முன்மாதிரியாக மாற்றியுள்ளது.

Published : April 30, 2026 at 3:35 PM IST
பொதுவாக மருத்துவர்கள் மற்றவர்களுக்கு ஆரோக்கியத்தை பற்றி ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், இந்த கதை ஒரு மருத்துவர் தனது சொந்த உடல்நலத்திற்காக எடுத்த ஒரு துணிச்சலான முடிவை பற்றியது. காஸியாபாத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் உமேஷ் சந்திர பந்த், 2024 நவம்பரில் ஒரு வழக்கமான உடல் பரிசோதனையை மேற்கொண்டார்.
அதன் முடிவுகள் அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை தந்தன. அவரது ரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருந்தது. அதாவது, அவர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான 'ப்ரீ-டயாபெடிக்' (Pre-diabetic) நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
நம்மில் பலருக்கு இதுபோன்ற ஒரு எச்சரிக்கை வரும்போது, மருந்துகளின் பின்னால் ஓடுவோம் அல்லது பயத்தில் முடங்கிவிடுவோம். ஆனால், டாக்டர் உமேஷ் இந்த எச்சரிக்கையை தனது வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக கருதினார்.
சர்க்கரை நோய் கதவைத் தட்டும் வரை காத்திருக்காமல், தனது அன்றாட பழக்கவழக்கங்களில் அவர் கொண்டு வந்த சிறிய மாற்றங்கள், இன்று அவரை ஒரு சிறந்த முன்மாதிரியாக மாற்றியுள்ளது. உடல்நலக்குறைவை எதிர்கொள்ள அவர் கையில் எடுத்த ஆயுதம் 'மிதிவண்டி'. அந்த ஒரு சிறிய மாற்றம், எப்படி ஒரு மருத்துவரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பொழுதுபோக்கில் இருந்து ஒரு வாழ்வியல் முறையாக
டாக்டர் பந்துக்கு முன்பே சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும். ஆனால், அது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. நேரம் கிடைக்கும்போது ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் என சாதாரணமாக சுற்றிவிட்டு வருவார். ஆனால், இந்த உடல்நலப் பாதிப்பு தெரிந்த பிறகு, அவர் சைக்கிள் ஓட்டுவதை ஒரு மருந்தாகவே பார்த்தார்.
தினமும் 10 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவதை ஒரு கட்டாய கடமையாக மாற்றிக்கொண்டார். இது கேட்பதற்கு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் ஒரு வேலையை தினமும் இடைவிடாமல் செய்வதுதான் மிகப்பெரிய சவாலே.
அவருடைய உறுதிப்பாடு அங்கேயே நின்றுவிடவில்லை. வாரத்திற்கு ஒருமுறை காஸியாபாத்தில் இருந்து டெல்லி இந்தியா கேட் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலில் 70 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. ஆனால், தன் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு அவரைத் தள்ளிக்கொண்டே இருந்தது.
கடினமான தொடக்கமும் கனிந்த பலன்களும்
எந்த ஒரு மாற்றத்தையும் தொடங்கும் போது உடல் அதற்கு ஒத்துழைக்காது. டாக்டர் பந்துக்கும் ஆரம்ப வாரங்கள் மிகவும் சவாலாகவே இருந்தன. காலையில் எழுந்து சைக்கிள் மிதிக்க செல்வதை விட, இதமான மெத்தையில் உறங்குவதுதான் சுகமாகத் தோன்றும். ஆனால், அவர் பின்வாங்கவில்லை.
சுமார் மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அவரது உடலில் மாற்றங்கள் தெரிய தொடங்கின. எப்போதும் இருந்த சோர்வு நீங்கி, ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதை அவர் உணர்ந்தார். அவருடைய உடல் எடை குறைந்து, மூச்சு வாங்குவது நின்றது. மிக முக்கியமாக, மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்தபோது, சர்க்கரை அளவு மெல்ல மெல்ல குறைய தொடங்கியிருந்தது.
ஆறு மாத காலத் தீவிர பயிற்சிக்கு பிறகு, அவரது ரத்த சர்க்கரை அளவு முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. டாக்டர் பந்த், "இதற்கு வெறும் ஒழுக்கம் மட்டுமே காரணம்" என்றார். பல நேரங்களில் இலக்கை அடைந்தவுடன் மனிதர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இன்றும் வாரத்திற்கு 120 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவருடைய வாராந்திர அட்டவணை இப்படித்தான் இருக்கிறது:
- திங்கள் முதல் சனி வரை தினமும் சுமார் 5 முதல் 10 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயணம்.
- வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து காஸியாபாத்தில் இருந்து இந்தியா கேட் வரை 70 கிலோமீட்டர் பயணம்.
உடல் நலத்தை தாண்டிய மன அமைதி
சைக்கிள் ஓட்டுவது என்பது வெறும் கலோரிகளை எரிக்கும் ஒரு செயல் மட்டுமல்ல என்பதை டாக்டர் பந்த் தன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்தார். அது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு தியானம் போன்றது என்கிறார் அவர். காலையில் இதமான காற்றில் பெடல் செய்யும்போது, மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு கிடைப்பதாக அவர் கூறுகிறார். உலகெங்கிலும் உள்ள சைக்கிள் வீரர்கள் சொல்வது போல, இது கட்டணம் இல்லாத ஒரு சிறந்த மனநலச் சிகிச்சை.
தனது வெற்றியை தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ளாமல், சமூகத்திற்கும் கொண்டு செல்ல அவர் விரும்பினார். சமூக ஊடகங்கள் மற்றும் நேரடிச் சந்திப்புகள் மூலம் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகளை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இதை பார்த்து ஈர்க்கப்பட்ட பல இளைஞர்களும், முதியவர்களும் அவரோடு இணைந்து சைக்கிள் ஓட்டத் தொடங்கினர். ஒரு தனி மனிதனின் ஆரோக்கியப் பயணம், மெல்ல மெல்ல ஒரு மக்கள் இயக்கமாக மாறியது.
ஆன்மீகமும் ஆரோக்கியமும் இணைந்த பயணம்
டாக்டர் பந்த் தனது சைக்கிள் பயணத்தை ஆன்மீகத்தோடும் இணைக்கத் தொடங்கினார். பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்லவும், ஹரித்வாருக்கு காவடி யாத்திரை மேற்கொள்ளவும் அவர் தனது சைக்கிளையே பயன்படுத்தினார்.
இந்தப் பயணங்களில் அவருடைய மகளும் அவருடன் சைக்கிளில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தந்தையாகவும் மகளாகவும் அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை உருவாக்கியதுடன், வழியில் பார்த்த ஆயிரக்கணக்கான மக்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவருக்கு உதவியது.
இன்று இந்தியாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல கோடி மக்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் வரப்போவது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறையில் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, துரித உணவுகளை உண்பது போன்றவை நம்மை ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளுகின்றன.
இத்தகைய சூழலில், மருந்துகளால் மட்டுமே உடலைக் குணப்படுத்த முடியாது, நம்முடைய வாழ்க்கை முறையே நமக்குச் சிறந்த மருந்தாக அமையும் என்பதற்கு மருத்துவர் பந்த் போன்றவர்களின் வாழ்க்கையே உதாரணம்.

