30 நாட்களுக்கு 'நோ சுகர் சேலஞ்ச்' இருந்தால் என்னவாகும்? ஆய்வு கூறும் 5 மாற்றங்கள் இதோ!
சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் உடலில் தேவையற்ற கலோரிகளை சேர்க்கின்றன. இது குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரக் காரணமாகிறது

Published : February 26, 2026 at 4:01 PM IST
இன்றைய டிஜிட்டல் உலகில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முதல் யூடியூப் ஷார்ட்ஸ் வரை எங்கு பார்த்தாலும் 'நோ சுகர் சேலஞ்ச்' (No Sugar Challenge) பற்றிய பேச்சுகள்தான் அதிகம். இதை பற்றி ஏகப்பட்ட மீம்ஸ்களும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
இதைப் பார்த்து உற்சாகமடைந்து பலரும் இந்த சேலஞ்யை தொடங்கினாலும், பெரும்பாலானவர்கள் ஒரு வாரத்திற்குள்ளேயே தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை கண்டு 'டிமிக்கி' கொடுத்துவிட்டு பழைய நிலைக்கே திரும்பி விடுகிறார்கள். ஆனால், மன உறுதியோடு இதைப் பின்பற்றுபவர்கள் ஆச்சரியமான உடல் மாற்றங்களை உணர்கிறார்கள்.
இங்கே நாம் குறிப்பிடுவது வெள்ளைச் சர்க்கரையை மட்டுமல்ல, நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேன் என அனைத்து விதமான சேர்க்கப்பட்ட சர்க்கரைகளையும் (Added Sugars) சேர்த்துதான். இப்படியிருக்க, டீ, காபி, பிஸ்கட், இனிப்புகள் என 30 நாட்களுக்கு இவற்றை முழுமையாகத் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை விரிவாக காண்போம்.
ஆற்றல் மட்டம் அதிகரிக்கிறது: சர்க்கரை கலந்த உணவுகளை உண்ணும்போது உடலில் திடீரென ஆற்றல் அதிகரிப்பது போன்ற உணர்வு (Sugar High) ஏற்படும், ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஆற்றல் சரிந்து உடல் சோர்வடையத் தொடங்கும்.
சர்க்கரையைத் தவிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. இதனால் நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாகச் செயல்பட முடியும். ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் (Harvard Health Publishing) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்க்கரை நுகர்வைக் குறைப்பது ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக்கி, உடலில் திடீர் சோர்வு ஏற்படுவதைத் தடுக்கிறது.
உடல் எடை குறைய வாய்ப்புள்ளது: 'தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்' (The American Journal of Clinical Nutrition) இதழில் வெளியான ஆய்வின்படி, சர்க்கரையைக் குறைப்பது உடல் கொழுப்பு மற்றும் இடுப்புச் சுற்றளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்க்கின்றன. இது குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரக் காரணமாகிறது. சர்க்கரையை நிறுத்தும் போது, இன்சுலின் அளவு குறைந்து உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி, அதிகப்படியான உணவு உண்பதைத் தவிர்க்கிறது.
மனத் தெளிவு மற்றும் மூளைச் செயல்பாடு மேம்படும்: அதிகப்படியான சர்க்கரை மூளையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒருவித போதை பழக்கம் போன்ற உணர்வை தரும். இது காலப்போக்கில் கவனச்சிதறல், பதற்றம் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
சர்க்கரையைத் தவிர்த்த 30 நாட்களில் மூளை தன்னைத்தானே சீரமைத்துக் கொள்கிறது. இதனால் மன அமைதி மற்றும் தெளிவான சிந்தனை கிடைக்கிறது. 'நியூரிஷனல் நியூரோசயின்ஸ்' (Nutritional Neuroscience) இதழில் வெளியான ஆய்வுகள், அதிக சர்க்கரை உணவுகள் மனச்சோர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றும், சர்க்கரையைக் குறைப்பது மனநலத்தை மேம்படுத்தும் என்றும் நிரூபித்துள்ளன.
பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமம்: 'ஜர்னல் ஆஃப் தி அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ்' (Journal of the Academy of Nutrition and Dietetics) இதழில் வெளியான ஆய்வின்படி, சர்க்கரையைக் குறைப்பது முகப்பருக்களைக் குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சர்க்கரை உடலில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்கி, தோலின் நெகிழ்வுத்தன்மைக்குத் தேவையான கொலாஜன் புரதத்தை சிதைக்கிறது. இதனால் முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் சருமம் பொலிவிழத்தல் போன்றவை ஏற்படுகின்றன. சர்க்கரையைத் தவிர்த்து 30 நாட்கள் நிறைவடையும் போது, சருமத்தில் உள்ள வீக்கம் குறைந்து முகம் பளிச்சென்று மாறும்.
நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் ஆரோக்கியம்: தொடர்ச்சியான சர்க்கரை நுகர்வு வகை 2 நீரிழிவு, இதய நோய், கல்லீரல் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வித்திடுகிறது. சர்க்கரையை முற்றிலும் நிறுத்தும் போது, உடலில் வீக்கம் குறைந்து நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுகிறது. இது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த அடித்தளமாக அமைகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபர் தனது அன்றாட கலோரியில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
இந்த மாற்றத்தைத் தொடங்குவது எப்படி?
- உணவுப் பொருட்களின் லேபிள்களைச் சரிபார்க்கவும் (சுக்ரோஸ், மால்டோஸ், உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் போன்ற பெயர்களில் சர்க்கரை மறைந்திருக்கும்).
- பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்ற இயற்கை உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- இனிப்பு பானங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் அல்லது மூலிகை டீ வகைகளைப் பருகலாம்.
- நிம்மதியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை சர்க்கரை மீதான ஆசையைக் குறைக்க உதவும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

