ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பெண் உயிரிழப்பு - ஐ.நா எச்சரிக்கை!
தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தால், ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலேயே 90% உயிரிழப்புகள் நிகழ்கின்றன.

Published : January 4, 2026 at 10:40 AM IST
உலகெங்கிலும் பெண்களை அச்சுறுத்தும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய். ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.
2022-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 6,60,000 பெண்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 3,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தபோதிலும், வளரும் நாடுகளில் போதிய தடுப்பூசி வசதிகளும், பரிசோதனைகளும் இல்லாததால் இது ஒரு பெரும் உயிரிழப்பு காரணியாகத் தொடர்வதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? பெண்களின் கருப்பையின் கீழ் பகுதியும், யோனியும் இணையும் இடமான 'கர்ப்பப்பை வாய்' பகுதியில் (Cervix) இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. இது ஒரே நாளில் உருவாவதில்லை. பல ஆண்டுகளாக செல்கள் மெதுவாக மாற்றமடைந்து, புற்றுநோய்க்கு முந்தைய நிலையை (Precancerous lesions) அடைகின்றன.
இந்த அசாதாரண செல்களை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், அவை தீவிர புற்றுநோயாக மாறி கருப்பை திசுக்களை அழிப்பதோடு உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவிவிடும். 99 சதவீத கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' (HPV) எனப்படும் வைரஸ் தொற்றே முக்கிய காரணமாகும்.
HPV வைரஸ் எவ்வாறு பரவுகிறது? இது உடலுறவின் மூலம் பரவக்கூடிய பொதுவான வைரஸ். பாலியல் ரீதியாகச் செயல்படும் பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த தொற்றுக்கு ஆளாகிறார்கள். பொதுவாக, ஒரு பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸை அழித்துவிடும். ஆனால், சிலருக்கு இந்த தொற்று நீடித்து தங்கி, காலப்போக்கில் செல்களைச் சிதைத்து புற்றுநோயாக மாறுகிறது.
ஏன் இவ்வளவு ஆபத்தானது? ஆரம்ப அறிகுறிகள் தெரிவதில்லை: தொடக்க நிலையில் இது எந்த வலியையோ அல்லது அறிகுறியையோ காட்டாது. மாதவிடாய் காலங்களுக்கு இடைப்பட்ட ரத்தப்போக்கு, உடலுறவுக்குப் பின் ஏற்படும் ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ரத்தப்போக்கு போன்றவை தெரிந்தால், புற்றுநோய் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது என்று அர்த்தம்.
இளம் பெண்களை தாக்குகிறது: மற்ற புற்றுநோய்கள் முதியவர்களைத் தாக்கும் நிலையில், இது 30 முதல் 50 வயதுக்குட்பட்ட இளம் பெண்களை (குறிப்பாக இளம் தாய்மார்களை) அதிகம் தாக்குகிறது.
HIV பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து: எச்.ஐ.வி (HIV) பாதிப்பு உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 6 மடங்கு அதிகம். இவர்களுக்கு 15-20 ஆண்டுகளில் வளர வேண்டிய புற்றுநோய், 5-10 ஆண்டுகளிலேயே வேகமாக வளர்ந்துவிடும்.
சமமற்ற மருத்துவ வசதி: தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகள் இல்லாத காரணத்தால், ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலேயே 90% உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
முன்னெச்சரிக்கை அறிகுறிகள்! புற்றுநோய் தீவிரமடையும் போது பின்வரும் அறிகுறிகள் தென்படலாம்.
- யோனியிலிருந்து துர்நாற்றத்துடன் கூடிய நீர் போன்ற அல்லது இரத்தம் கலந்த திரவம் வெளியேறுதல்.
- இடுப்புப் பகுதியில் வலி அல்லது உடலுறவின் போது வலி.
- தீவிர நிலையில் முதுகு வலி, கால் வலி, கால்களில் வீக்கம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம்.
தடுப்பது எப்படி? இந்த நோயிலிருந்து தப்பிக்க மூன்று எளிய வழிகள் உள்ளன என்கிறது WHO.
- தடுப்பூசி (Vaccination): 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் உறவு தொடங்குவதற்கு முன்பே HPV தடுப்பூசி போடுவதன் மூலம் இதை 90% தடுக்கலாம்.
- பரிசோதனை (Screening): 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் (HIV பாதிப்பு உள்ளவர்கள் 25 வயதிலிருந்து) 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் 'HPV பரிசோதனை' செய்து கொள்ள வேண்டும்.
- ஆரம்ப சிகிச்சை: பரிசோதனையில் புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்கள் கண்டறியப்பட்டால், Cryotherapy போன்ற எளிய சிகிச்சைகள் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
உலக சுகாதார அமைப்பு 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த நோயை ஒழிக்க ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது: 90% சிறுமிகளுக்கு தடுப்பூசி, 70% பெண்களுக்குப் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்ட 90% பெண்களுக்குச் சிகிச்சை. இந்த இலக்குகளை அடைவதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

