தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன் - ஒரே படத்தில் 6 இயக்குநர்கள் அறிமுகம்
பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் முதல் படத்தில் மமிதா பைஜூ, சுவாசிகா, அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Published : July 7, 2026 at 12:11 PM IST
சென்னை: பிஆர் ஷோ (PR Show) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள பிரதீப் ரங்கநாதன், ஒரே படத்தில் 6 இயக்குநர்களை அறிமுகப்படுத்துகிறார்.
பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் ’பிஆர் ஷோ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ள முதல் படத்தின் அறிவிப்பை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூ, சுவாசிகா, பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சிறப்பம்சமாக 6 இயக்குநர்கள் ஒரே படத்தை இயக்குகின்றனர். இந்த 6 பேர் கொண்ட குழுவிற்கு ’The Alpha unit' என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் கவனம் ஈர்க்கும் விதமாக பிரதீப் ரங்க்நாதன் எழுதியுள்ள கதையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகராக அறிமுகமாகிறார். இன்றைய ஜென்சி தலைமுறையினரை கவர்ந்த சாய் அபயங்கர் இப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், பிஆர் ஷோ நிறுனத்தின் முதல் பட அறிவிப்பு வீடியோவில், ஆக்ஷன் காட்சிகள் மூலம் அனைத்து நடிகர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாய் அபயங்கர் இசையில் ‘Aane wala star' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.
‘PR Show’ it is ☺️#PRS1 pic.twitter.com/OJqK7OjK7F
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 6, 2026
அதேபோல் இந்த வீடியோவில் PR Show பெயர் ஸ்டைலிஷான வகையில் செய்யப்பட்டு, ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ, அஷ்வத் மாரிமுத்து போன்ற நட்சத்திரங்களுடன், 6 இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கும் வித்தியாசமான முயற்சி, சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
’கோமாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக பிரதீப் ரங்கநாதன், முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதனைத்தொடர்ந்து ’லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக நடித்து, ஜென்சி தலைமுறையினர் மனதில் கதாநாயகனாக இடம்பிடித்தார். அதனைத்தொடர்ந்து ’டிராகன்’ படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.
ஏற்கனவே 3 படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் உருவெடுத்துள்ளார். இந்நிலையில் இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிநடை போடும் பிரதீப் ரங்க்நாதன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளது, கோலிவுட் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

