சிபிஎஸ்சி பாடத்தில் நீதித் துறையை விமர்சிப்பதா? தாமாக முன்வந்து வழக்காக எடுத்த உச்ச நீதிமன்றம்
இது கவலைக்குரிய விவகாரம் என்றும், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Published : February 25, 2026 at 5:07 PM IST
டெல்லி: சிபிஎஸ்சி 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித் துறை தொடர்பாக இடம்பெற்றுள்ள சில கருத்துகள் குறித்து தாமாக முன்வந்து வழக்காக பதிந்த உச்ச நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சிபிஎஸ்இ பாடத் திட்டங்களை என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் தயாரித்து வருகிறது. அந்த வகையில் சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ”நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பில் இரண்டு புதிய தலைப்புகளை என்சிஇஆர்டி இணைத்துள்ளது.
”தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி” மற்றும் “நீதித்துறையில் ஊழல்” என்ற தலைப்புகளில் நீதிமன்றங்களின் படிநிலை, கட்டமைப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈடிவி பாரத் இணையதளத்தில் நேற்று செய்தி வெளியானது. இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் கவனத்திற்கு சென்றுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி பாக்சி கூறும்போது, "8 ஆம் வகுப்பு புத்தகத்தில் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிராக பாடங்கள் இடம்பெற்றுள்ளன," என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறும்போது, “சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும், வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற அமர்வு, மற்றும் அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தால் வருத்தத்தில் உள்ளனர். இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வேன். சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.
| இதையும் படிங்க: இனி கேரளா அல்ல 'கேரளம்' - பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் |
முன்னதாக, இது கவலைக்குரிய விவகாரம் என்றும், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, நீதிபதி விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வுக்கு முன் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் என்சிஇஆர்டி 8 ஆம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள நீதித் துறை வழக்குகள் குறித்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (suo - motu) விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

