ETV Bharat / bharat

கருணை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

ஒரு முறை காட்டும் கருணையை முடிவே இல்லாத கருணையாக மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 13, 2025 at 7:55 PM IST

1 Min Read
Choose ETV Bharat

புதுடெல்லி: "கருணை அடிப்படையில் அரசு பணி கிடைக்கப்பெற்றவர்கள், அதே கருணையை காரணம் காட்டி உயர் பதவிகளை கோர முடியாது" என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கப்படும். வாரிசுகளின் கல்வி தகுதிக்கேற்ப அவர்கள் குறிப்பிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர். இது, முழுக்க முழுக்க கருணை அடிப்படையில் கிடைக்கும் சலுகை ஆகும். நாடு முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில், கருணை அடிப்படையில் அரசு துப்புரவு பணியாளர்களாக பணி கிடைக்கப்பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு பேர், தங்களுக்கு உயர் பதவி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றமும், அவர்களுக்கு ஜூனியர் அசிஸ்டென்ட் பதவியை வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால், மன்மோகன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணி வழங்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு, தனது கல்வித் தகுதி அடிப்படையில் உயர் பதவி கோர முடியாது" என வாதிட்டார்.

இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கர் கைது... கதவை உடைத்து அதிரடி காட்டிய போலீசார்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறுகையில், "கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கப்பட்டாலே, அவர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதாக அர்த்தம். அதற்கு பிறகும், அவர்கள் உயர் பதவியை கோருவதை ஏற்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, இருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தங்களை போல பணியில் சேர்ந்த மற்றொருவருக்கு உயர் பதவி கிடைத்ததால், தங்களுக்கும் அதை வழங்க வேண்டும் என கேட்பதில் எந்த அடிப்படையும் இல்லை.

சட்டத்துக்கு புறம்பாக சில அதிகாரிகள் செய்யும் தவறுகளை முன்னுதாரணமாக கொள்ள முடியாது. அதேபோல, அந்த தவறை மேலும் மேலும் நீட்டிக்கவும் இயலாது. குடும்ப உறுப்பினர்களுக்கோ, வாரிசுகளுக்கோ அரசு பணி வழங்கப்படுவது முழுக்க முழுக்க கருணை அடிப்படையில் மட்டும்தான். அப்படி பணியில் அமர்த்தப்பட்டவர், தனது தகுதியை மட்டுமே காரணமாக கூறி உயர் பதவியை கேட்கக் கூடாது. ஒரு முறை காட்டும் கருணையை, முடிவே இல்லாத கருணையாக மாற்ற முடியாது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.