ETV Bharat / bharat

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 7 பேரை காணவில்லை என கேரளம் முதல்வர் தகவல்

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு அமைச்சர்கள், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் சதீஷன் தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 5:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

வயநாடு (கேரளம்): வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில அரசு உறுதிச் செய்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், வயநாட்டில் சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் கனமழையால் இன்று (ஜூலை 07) காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், நிலச்சரிவு ஏற்பட்டு மழை வெள்ளம் வேகமாக வர, மக்கள் பதறியடித்தபடி ஓடிச் செல்கின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாக கேரள மாநில அரசு உறுதிச் செய்துள்ளது. பலத்த காயமடைந்த பலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தினர், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் என அனைத்துத்துறை சார்ந்தவர்களும் வயநாட்டிற்கு விரைந்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களின் விவரங்கள்

கூடம்மாள் (தமிழ்நாடு), குஞ்சு (கேரளம்), சூரஜ் யாதவ் (பீகார்), சஞ்சய் தாக்கூர், ரஞ்னீஷ், திலீப், ஹிரா குமார், தன்மய் கோஷ் ஆகியோர் வயநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஒருவரின் நிலைமைக் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை அரசு தரப்பு வெளியிடவில்லை.

மண் குவித்து வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம்

நிலச்சரிவு குறித்து அமைச்சர் சித்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வயநாட்டில் சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிக்காக மண் குவித்து வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம். மழை குறைவாக பெய்த போதே விபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது; எனினும் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு விசாரணை நடத்தும். குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வயநாடு மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த 'LDRF' குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. கண்ணூர் 'LDRF' குழுவினரையும் விபத்து பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நிலச்சரிவு குறித்து பஞ்சாயத்து உறுப்பினர் சஹாத் கூறுகையில், "சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிகளை கொங்கன் நிறுவனம் (Konkan Company) மேற்கொண்டு வருகிறது. குவித்து வைக்கப்பட்ட மண் சரிந்து விழவில்லை. மாறாக, கட்டுமான பகுதியில் இருந்த ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் பயண கட்டுப்பாடுகள்

மீட்புக் குழுக்களும், ஆம்புலன்ஸுகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாகச் செல்வதை உறுதிச் செய்யும் வகையில் கோழிக்கோடு-கல்பெட்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தாமரச்சேரி கணவாய் (Thamarassery Pass) பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மெப்பாடி (Meppadi) பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆய்வு

கேரளம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்திற்கு விரைந்து சென்ற முதலமைச்சர் சதீஷன், வயநாடு நிலச்சரிவு, மாநிலத்தில் பெய்து வரும் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

இதையும் படிங்க: நேருவை தொடர்ந்து சாதனை| இந்தோனேசியாவின் மிக உயரிய 'பிந்தாங் அதிபூர்ணா' விருது பெற்றார் மோடி

கேரளம் முதலமைச்சர் சதீஷன் பேட்டி

கேரளம் மாநில முதலமைச்சர் சதீஷன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "முதற்கட்ட தகவலின்படி ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேரை காணவில்லை. காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கப்பாதை கட்டுமான பணியிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை அகற்றுமாறு மாநில பேரிடர் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும் கடந்த ஜூன் 20- ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.

எனினும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சுரங்க கட்டுமான ஒப்பந்ததாரர் பின்பற்றவில்லை. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். முதலமைச்சரின் அலுவலகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றது" என்றார்.