நாக்பூர் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர விபத்து; 12 பேர் உயிரிழந்த சோகம்
தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார்.

Published : March 1, 2026 at 3:47 PM IST
நாக்பூர்: வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரின் ரவுல்கானில் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் எனும் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இன்று (மார்ச் 1) இந்த தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் பெண்கள் என்றும் கூறப்படுகிறது.
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். தீயணைப்புப் படையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடி, தொழிற்சாலையில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அங்கு மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர், நாக்பூர் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போடார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தேவையான அனைத்து சிகிச்சைகள் மற்றும் உதவிகளையும் வழங்கக்கோரி மகாராஷ்டிரா அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், விபத்து நடந்த தொழிற்சாலையை மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
இதற்கிடையே, தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதியையும் அறிவித்தார்.
மேலும், ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்திற்குட்பட்ட வெட்லபலேம் கிராமத்தில் சூர்யா ஸ்ரீ பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அதில், 21 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நாக்பூரில் வெடிபொருள் உற்பத்தி தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ள வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| இதையும் படிங்க: ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 20 பேர் உயிரிழப்பு |

