ETV Bharat / bharat

வேட்பாளர் பட்டியலை திருடவே ED சோதனை; பேரணியில் கொந்தளித்த மம்தா பானர்ஜி

பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தும் போது அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பையும், சிறப்பு சலுகையையும் எதிர்பார்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அவர்களை போலீசார் விட்டு இழுத்துச் செல்ல வைக்கிறார்கள் என மம்தா குற்றஞ்சாட்டினார்.

பேரணியில் பங்கேற்ற மம்தா பானர்ஜி
பேரணியில் பங்கேற்ற மம்தா பானர்ஜி (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 8:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் மிகப் பெரிய பேரணி நடைபெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐ-பேக் நிறுவனத்தின் கொல்​கத்​தா​ அலுவல​கம், அதன் இணை நிறுனவர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்று கொண்டிருக்கும் போதே பிரதீக் ஜெயின் வீட்டிற்கு போலீசாரோடு சென்ற மம்தா பானர்ஜி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், சில ஆவணங்களையும் அவர் வீட்டிற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

வேட்பாளர் பட்டியலை திருடவே அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத் துறையின் சோதனையை கண்டித்து இன்று கொல்கத்தாவில் மிகப் பெரிய பேரணியை மம்தா பானர்ஜி நடத்தினார். அப்போது பேசிய அவர், "அமலாக்கத் துறை சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை கைப்பற்றும் முயற்சியாகவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

எங்களை அரசியல்ரீதியாக அணுக முடியாததால், குறுக்கு வழியில் எங்களின் திட்டங்களை தெரிந்து கொள்ள இத்தகைய சோதனைகளை மேற்கொள்கிறார்கள். பாஜகவின் அரசியல் கருவியாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. சோதனை நடைபெற்ற இடத்திற்கு நான் கட்சியின் தலைவராகவே சென்றேன். மாநில முதல்வராக செல்லவில்லை. இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக நான் எதையும் செய்யவில்லை.

இந்தியா பாஜக சொத்து இல்லை

அமலாக்கத் துறை நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் உள்ள அமித்ஷா அலுவலகம் முன்பாக போராடிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நடத்தப்பட்ட விதம் வெட்கக்கேடானது. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதை ஏற்க மாட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளான அவர்களை மிக மோசமாக டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். எம்பிக்கள் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் ஜனநாயகம் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிக்காக செயல்படுவது நல்ல ஜனநாயகமாக இருக்க முடியாது.

பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தும் போது அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பையும், சிறப்பு சலுகையையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அவர்களை போலீசார் இழுத்துச் செல்கிறார்கள். இந்த இரட்டை நிலைபாடு, பாஜகவின் ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதை இன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மரியாதை என்பது பரஸ்பரமானது, இன்று நீங்கள் எங்களை மதித்தால், நாளை உங்களை நாங்கள் மதிப்போம். எங்களை நீங்கள் தெருவில் இழுத்துச் சென்றால், நாங்களும் உங்களை இழுத்துச் செல்வோம். இது எல்லோருக்குமான நாடு. கண்ணித்துக்கு யார் தகுதியானவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் மட்டுமே தீர்மானிக்க முடியாது.

இந்தியாவைை ஆள பாஜகவை அனுமதிக்க முடியாது

தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்திலும் அவர்கள் அதையே செய்ய துடிக்கிறார்கள். டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் நிலக்கரி ஊழல் பணத்தை பெறுகிறார்கள். தேவைப்பட்டால் பொதுமக்கள் முன்னிலையில் அதற்கான ஆதாரங்களை என்னால் வெளியிட முடியும். வரும் 2026 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் மீண்டும் வெற்றி பெறுவோம். மத்தியில் உள்ள பாஜக ஆட்சி 2029 வரை நீடிக்காது. மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு டெல்லியிலும் நாம் வெற்றி பெறுவோம். இந்தியாவை ஆள பாஜகவை அனுமதிக்க முடியாது" என்றார்.

முன்னதாக, அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை டெல்லி காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.