ETV Bharat / bharat

அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து கல்யாண் பானர்ஜி மீதும் கொடூர தாக்குதல்; கடும் பதற்றத்தில் மேற்கு வங்கம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதலால் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கல்யாண் பானர்ஜி மீதும் கொடூர தாக்குதல்
கல்யாண் பானர்ஜி மீதும் கொடூர தாக்குதல் (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2026 at 4:51 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி மீது நேற்று தாக்குதல் நடைபெற்ற நிலையில், இன்று அக்கட்சியின் மற்றொகு எம்.பியான கல்யாண் பானர்ஜி மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியில் அமர்ந்தது. மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தலைநகரான கொல்கத்தாவிலும், பிற மாவட்டங்களிலும் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே மோதல்கள் வெடித்தன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினரும், டிஎம்சி கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி நேற்று சோனாப்பூர் பகுதிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் அவர் மீது கற்கள், காலணிகள் மற்றும் முட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

இந்த தாக்குதலில் காயமைடந்த அபிஷேக் பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, "பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் ஆட்சியாளர்களே கொலைக்காரர்களாக மாறிவிட்டார்கள்" என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பதிலளித்துள்ள மேற்கு வங்க பாஜக, "திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் வன்முறை அரசியலுக்கு எதிரான மக்களின் கோபமே இந்த தாக்குதல்" என தெரிவித்துள்ளது.

இதனிடையே ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சாண்டிதாலா காவல் நிலையத்திற்கு வெளியே இன்று நடைபெற்ற மோதலில் டிஎம்சி மூத்த தலைவரும், அக்கட்சி எம்.பியுமான கல்யாண் பானர்ஜி மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தங்கள் கட்சி தொண்டர்களை விடுதலை செய்யக்கோரி மனு ஒன்றை காவல் நிலையத்தில் அவர் கொடுக்க சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த கல்யாண் பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஎம்சி எம்பிக்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதலால் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.