கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பது தெரிய வந்துள்ளது.


Published : July 2, 2026 at 7:33 PM IST
ராம்நகர்: கல்குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் அண்டை மாவட்டமான தாவரேகெரே-வில் உள்ள மடப்பட்டணத்தில் ஹூலுவெனஹள்ளி எனும் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3.20 ஏக்கர் பரப்பளவில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வழக்கம் போல் இன்று (ஜூன் 2) பாறைகள் வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வேளையில், திடீரென பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் இதுவரை ஏழு தொழிலாளர்கள் உயிரிந்திருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவிர, இன்னும் பலர் சரிந்து விழுந்த பாறைகளின் இடுக்கிற்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, பாறைகளின் இடுக்கிற்குள் சிக்கியவர்களின் உடலை கனரக இயந்திரம் மூலம் மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுவரை நான்கு உடல்கள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ராம்நகர் காவல் கண்காணிப்பாளர் சீனிவாஸ் மற்றும் சுரங்கங்கள், புவியியல் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், விபத்தால் காயமடைந்த தொழிலாளிகளுக்கு உள்ளூரிலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர், பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த புவனேஷ்வர் சிங் (37), தர்மேஷ் சிங் (28), ராஜேஷ் பிரசாத் (28), ராம் அவதார் சிங் (30), சத்ய நாராயண கவுண்ட் (32), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் (22) மற்றும் யாத்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராம் நாயக் (46) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தவிர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
| இதையும் படிங்க: தப்பியோடிய கைதி - இரண்டு காவலர்கள் 'சஸ்பெண்ட்' |
கற்குவாரி விபத்து குறித்த மாநிலத்தின் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுகையில், "கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்.
கல் குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவது குவாரி உரிமையாளர்களின் கடமையாகும். விதிகளை மீறும் குவாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். விபத்து குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இது கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது, வெடிப்பு எதுவும் நிகழவில்லை என தெரிய வந்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விபத்து சம்பவம் குறித்து ஐஜிபி கிரிஷ் கூறுகையில், "காலை 7 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது, இரண்டு கிரஷர் எந்திரங்கள் பணியில் இருந்தன. அப்போது பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, 5 பேர் பலத்த காயமடைந்தனர் மற்றும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. விரைவில் விபத்திற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

