கன்னியாகுமரி: குமரியில் சூரியன் மறையும் இடத்தில் ஒரு புதிய விண்வெளி பூங்கா அமையும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதியளித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளை கைலாசநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது: சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வர உள்ளதாக கூறியிருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றபோது, ராக்கெட் உந்துவிசையில் சிலப் பிரச்சினைகள் இருந்தன. அதே பிரச்சினையை கடந்த ஆண்டு மகேந்திரகிரியில் நாங்கள் சந்தித்தோம். சுனிதா வில்லியம்ஸ்-க்கு ஏற்பட்ட சிக்கலை நாம் படித்து வருகிறோம். மே மாதம் பி.எஸ்.எல்.வி 61-ஆவது ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்ப இருக்கிறோம்.
இஸ்ரோவில் 2025-ஆம் ஆண்டு நிறைய சாதனைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஜனவரி 6-ஆம் தேதி ஆதித்தியா எல்1 (Aditya L1) எனும் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து நிறைய அறிவியல் தரவுகள் கிடைத்தன.
ஜனவரி 16-இல் ஸ்பா-டெக்ஸ் திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றிகண்டது. மார்ச் 13-ஆம் தேதி, புவிவட்டப்பாதையில் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள்களை பிரிக்கும் முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளோம்.
ஜனவரி 29-இல் 100-ஆவது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது. மேலும் 3-ஆவது ஏவூர்தித் தளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் 42 மாதத்தில் அமைக்க 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் எடை உள்ள இன்ஜின் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக மகேந்திரகிரியில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் சோதனை கூடம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கன்னியாகுமரியில் சூரியன் மறையும் இடத்தில் ஒரு விண்வெளிப் பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.
அதில் வைத்து புதிதாக தயாரிக்கப்பட்ட எஞ்சினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். இது பெரிய சாதனையாகும். இன்னும் சில சோதனைகள் பாக்கி உள்ளன. அதை முடித்துவிட்டு 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை வைத்து மார்க்-3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மார்க் -3 ராக்கெட் உதவியுடன் 4,000 கிலோ எடை உள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இதையும் படிங்க |
மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலைதொடர்பு செயற்கைக்கோளை, மார்க் -3 ராக்கெட் மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். மகேந்திரகிரியில் நிறைய பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. முன்பு இஸ்ரோ மட்டுமே இந்திய விண்வெளிக்கான எல்லா வேலைகளையும் செய்துவந்தது.
இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, இளைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ராக்கெட் தயாரித்தல், விண்வெளி சோதனைகளுக்கான மென்பொருளை உருவாக்குதல் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களை இஸ்ரோ ஊக்குவித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.