சென்னை: சென்னை ஐஐடி-யின் தொழில் ஊக்குவிப்பு மையம் (IIT Madras Incubation Cell) கடந்த 12 ஆண்டுகளில், ரூ.50,000 கோடி மதிப்பில் 457 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை ஐஐடி வரலாற்றில் ஒரே நிதியாண்டில் (2024-25) 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இது குறித்து சென்னை ஐஐடி-யில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் காமகோடி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ''விக்சித் பாரத் 2047 திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப வல்லரசாக இந்தியா முன்னேறும் போது உற்பத்தி தேசமாகவும், ஸ்டார்ட் அப் தேசமாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி லட்சியமாகக் கொண்டுள்ளார்.

பொருளாதாரரீதியாகவும், சமூகப் பொறுப்புடனும் கூடிய பல்வேறு அம்சங்களை நாம் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. சமூக- பொருளாதாரப் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, ஐஐடி மெட்ராஸ் எப்போதும் அதிகளவில் ஸ்டார்ட் அப்களை உருவாக்க விரும்புகிறது” எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் காமகோடி மேலும் கூறுகையில், ''இந்த ஆண்டில், 417 காப்புரிமை விண்ணப்பங்களை 2024-25 நிதியாண்டுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். இது நாளொன்றுக்கு ஒரு காப்புரிமை என்பதை விட அதிகமாகும். சவாலை நிறைவேற்றும் வகையில், மூன்று நாட்களுக்கு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு தொழில் ஊக்குவிப்பு செய்யப்பட வேண்டும் என்ற இலக்குடன் ‘ஸ்டார்ட்அப் சதம்’ சவால் ஏப்ரல் 1, 2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த சவாலை எட்டும் வகையில் 104 ஸ்டார்ட் அப்-களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்திருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உற்பத்தி, ரோபாட்டிக்ஸ், மோட்டார் வாகனப் பொருட்கள், பேட்டரி, கட்டுமானம், பாதுகாப்பு, கப்பல் கட்டுதல், வான்வெளி, ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), சுகாதாரத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, குவாண்டம் போன்ற துறைகளில் உள்ள டீப்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இவற்றில் அடங்கும். பரந்த அளவில் இக்கல்வி நிறுவனம் தொழில் ஊக்குவிப்பு செய்துள்ளது. விக்சித் பாரத் 2047-ல் உற்பத்தி தேசமாகவும், தொடக்க நிறுவனங்களின் தேசமாகவும் இருக்க எங்களின் பணிவான பங்களிப்பாக இவற்றை வழங்குகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: நிலவில் இந்தியர்கள் இறங்குவது எப்போது தெரியுமா? வெளியான குட் நியூஸ்
விண்வெளி உற்பத்தி ஸ்டார்ட்-அப்பான Inbound Aerospace-இன் இணை நிறுவனர், அபிஜித் புடே கூறுகையில், "Inbound-இல் விண்வெளி தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான எங்கள் பணி, ஐஐடி மெட்ராஸ் தொழில்முனைவு சூழலின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தொலைநோக்குப் பார்வையால் சாத்தியமானது. ஐஐடி எம்ஐசி குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பும் நேரடி ஆதரவும் எங்கள் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருந்தது. இங்கு உருவாக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களில் ஒன்றாக நாங்களும் இருப்பது பெருமை அளிக்கிறது. இவை அனைத்தும் அறிவு, தாக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட எதிர்காலத்திற்கான பங்களிப்பாகும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்