சென்னை: வாரம் ரூ.200 மட்டுமே கூலியாக பெற்றுக்கொண்டு செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட வடமாநிலத்தை சேர்ந்த 48 பேர் மீட்கப்பட்டனர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த வயலா நல்லூர் பகுதியில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இந்த செங்கல் சூளையில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி மையத்தின் செயலாளர் நளினி தேவிக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று (மார்ச் 25) வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் நேரடியாக சென்று செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக அந்த சூளையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 48 பேரை மீட்டு பாரிவாக்கத்தில் உள்ள சமுதாய நல மையத்தில் வைத்து அதிகாரிகளும், காவல் துறையினரும் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த ஜனவரி மாதம் ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் கொடுத்து செங்கல் சூளையில் வேலை செய்ய அனுப்பியுள்ளனர். இங்கு வந்த பிறகுதான் கொத்தடிமைகளாக அவர்கள் நடத்தப்பட்டு வாரம் ரூ.200 மட்டும் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
இதையடுத்து மீட்கப்பட்ட 48 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி அவர்களது வங்கி கணக்கில் அரசு சார்பில் ஒருவருக்கு தலா ரூ. 30 ஆயிரம் வீதம் செலுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'மாநகராட்சி அலட்சியம்'; மூடப்படாத பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்த இளைஞர் - பதைபதைக்கும் காட்சி!
இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பகுதியில் இதுபோல வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்து வருகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சொந்த ஊரில் பிழைக்க முடியாமல் வாழ்வாதாரத்திற்காக மாநிலம் கடந்து வந்த பெண்கள் உட்பட வட மாநில தொழிலாளர்களுக்கு வாரம் ரூ.200 மட்டுமே கூலி கொடுத்து கொத்தடிமைகளாக வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.