கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சமீப காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை கடந்து செல்லும் காட்டு யானைகளின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு வெள்ளியங்கிரி அருகேயுள்ள முள்ளங்காடு பகுதியில் குட்டியுடன் இரண்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறின. பின்னர் மீண்டும் நேற்று காலை வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன.
அப்போது முள்ளங்காடு பகுதியில் காட்டு யானைகள் வந்த போது, அப்பகுதியில் இருந்த மின்வேலி யானைகளை வழி மறித்தது. இதனால் சிறிது நேரம் காட்டு யானைகள் தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தன. பின்னர் சமயோசிதமாக ஒரு பெண் யானை மின்வேலியின் கம்பிக்கு அடியில் புகுந்து வெளியேற, உடன் வந்த குட்டி யானையும் அதே போல் வெளியேறியது. மற்றொரு யானையால் அந்த வழியாக வெளியேற முடியாததால், மின் வேலியின் கம்பியை தாண்டியபடி வெளியேறியது. இவை அனைத்தையும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.