சென்னை: தமிழ்நாட்டில் தரமான சாலைகள் அதிகமாக இருக்கும் போது மேலும் மேலும் சாலைகளை அமைப்பதற்கான காரணம் என்ன என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மேட்டூர் முதல் தொப்பூர் வரையான 40 கிலோ மீட்டர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்மாப்பேட்டையில் சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருவதை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் உள்ளூர் மக்கள் விவசாயப் பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும்.
பணிகள் முறையாக செய்யப்படாமல் சாலையை 10 மீட்டர் இரு வழிச் சாலையாக மாற்றினால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். குறிப்பிட்ட இந்த வழித் தடத்தை சுங்கச்சாவடி சாலையாக மாற்றுவது தேவையற்ற ஒன்று. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத், "இரண்டு வழிச் சாலையை விரிவாக்கத்திற்கான பணிகள் இன்றும் முடியாததால், சட்ட விரோதமாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை அமைக்க சுமார் 4,500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து மனுத்தாக்கல் செயப்பட்டுள்ளது. 170 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் 60 சதவிகிதம் முடிந்துள்ளது" என தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, "ஏற்கனவே நன்றாக இருக்கும் சாலையை அகலப்படுத்துவிதற்கான காரணம் என்ன? சாலையை விரிவாக்கம் செய்து விட்டு சுங்கச்சாவடி வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? சாலையை மட்டும் மேம்படுத்துவதால் அரசுக்கு என்ன பயன்? எந்த முன்னேற்றமும் இல்லாத பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதால் யாருக்கு பயன்? தமிழ்நாட்டில் தரமான
சாலைகள் அதிகமாக இருக்கும் போது மேலும் மேலும் சாலைகளை ஏன் அமைக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பி, மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.