சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது. காலை 9 மணிக்கு முன்னதாகவே தவெக தலைவர் விஜய் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அவரது பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர். மேலும், அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தவெகவின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் நிறைவுரையாற்றினார்.
அவர் தனது உரையின் தொடக்கத்தில் திமுகவையும், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார். உரையை முடிக்கும் முன்பு மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து உரையின் முடிவில், Men may come and Men may go, But I go on forever என்ற ஆங்கில கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்த கவிதையை வில்லியம் ஜெ.பிளாக்கி எழுதியதாக கூறினார். ஆனால், உண்மையில் இந்த கவிதையை ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன் என்பவர் எழுதியது என்று தெரிய வந்துள்ளது. The Brook என்ற தலைப்பில் 13 பத்திகள் கொண்ட கவிதையை அவர் எழுதி உள்ளார்.

ஒவ்வொரு பத்தியும் நான்கு வரிகளைக் கொண்டுள்ளன. அவர் எழுதிய கவிதையின் மூன்றாவது பத்தியின் முடிவில் உள்ள இரண்டு வரிகள் தான் விஜய் கூறியதாகும். இதன் பொருள், 'யாரும் வரலாம், யாரும் போகலாம். ஆனால், நான் என்றென்றும் நிரந்தரமானவன்,' என்று இயற்கை கூறுவதாகும். அரசியலில் வருவார்கள், செல்வார்கள். ஆனால், நான் என்றென்றும் தொடர்வேன் என்ற பொருளில் விஜய் இந்த கவிதையை சொல்லி இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: 'நாங்க தான் போட்டி...என திமுகவுக்கு பகிரங்க சவால் விட்ட விஜய்! மோடி மீதும் கடும் விமர்சனம்!
நடிகர் விஜய், வடிவேல் நடித்த காவலன் எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய், வடிவேலுவை திட்டுவார். அப்போது வடிவேல், ''நெருப்பில் சுட்டால் ஆறி விடும், வெறுப்பில் சுட்டால் ஆறாது, என ஒரு காலத்தில் கண்ணதாசன் சொல்லி இருக்காரு,"என்பார். 'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்ற திருக்குறளைத் தான் வடிவேல் அப்படி மாற்றிச் சொல்லுவார். அப்போது அவரை பார்த்து விஜய் முறைப்பார். அப்போது வடிவேல், "கண்ணதாசனா? யேசுதாசா" என்று கேட்பார். அவர் பேசுவதை பார்த்து மயக்கம் வராத குறையாக விஜய் பெட்டில் படுத்து விடுவார். அப்போது வடிவேல் விஜய்யை பார்த்து, "அய்யோ பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு," என்பார். பொதுக்குழுவில் விஜய், ஆங்கில கவிதையின் எழுத்தாளரை மாற்றிச் சொன்னது இந்த நகைச்சுவை காட்சியை நினைவு படுத்துவதாக இருக்கிறது.
இது குறித்து கூறிய தவெக பிரமுகர் ஒருவர், "தலைவர் விஜய்க்கு உரையை எழுதும் குழுவில் இடம் பெற்றவர் இந்த கவிதையை எடுத்து உபயோகித்திருக்கிறார் என்றே கருதுகின்றோம். யார் எழுதியது என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து அதன் பின்னர் விஜய் உரையில் இடம் பெறச் செய்திருக்கலாம். அரசியலில் வளர்ந்து வரும் தலைவராக அறியப்படும் விஜய் ஒரு ஆங்கில கவிதையை மேற்கோள் காட்டியதுடன், அதை எழுதியவர் பெயரை தவறாக குறிப்பிடுவது பாதகத்தை ஏற்படுத்தக் கூடும் என நினைக்கிறேன். அடுத்த முறை உரையை தயாரிக்கும் போது தவறுகள் நேரா வண்ணம் தயாரிக்க தலைவர் உத்தரவிட வேண்டும்,"எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் தமது உரையின் முடிவில், 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்' என்ற திருக்குறளையும் விஜய் குறிப்பிட்டார். ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்பது இதன் பொருளாகும். இதன் மூலம் தாம் கட்சி தொடங்கிய இந்த தருணத்தில் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்