சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன், "2019- 20 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51 விழுக்காடு என்ற சாதனை படைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க இருக்கும் அரசு, கடந்த அதிமுக ஆட்சியில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் தொடங்கப்பட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை காழ்புணர்ச்சி காரணமாக தொடங்காமல் கைவிட்டது ஏன்?
2026ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் விழுப்புரம், கடலூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்க எண்ணிக்கை குறைந்து விட்டது. குறிப்பாக 2021 - 22ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 22 லட்சத்து 17 ஆயிரத்து 48 மாணவர்கள் எண்ணிக்கை இருந்த நிலையில், கடந்த 24 -25 ஆம் நிதி ஆண்டில் 19 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். முதுகலை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது அவசியம். கடந்த அதிமுக ஆட்சியில் 67 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 40 கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்டு உள்ளது,"என்றார்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இதற்கு பதில் அளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், "காழ்புணர்ச்சி காரணம் என உறுப்பினர் கூறுகிறார். ஜெயலலிதா பெயரில் இசைப் பல்கலைக்கழகம், மீனவளப் பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. ஜெயலலிதா பெயரிலான மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோப்பு நிலுவையில் இருந்தது. ஆளுநருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி ஜெயலலிதா பெயரிலான மீன்வளப் பல்கலைக்கழகம் சட்டப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது இப்போதைய திமுக ஆட்சியில் தான்.
ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ராணி மேரி கல்லூரி உள்ள இடத்தில் தலைமை செயலகம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு எதிராக கலைஞர் சட்ட போராட்டம் நடத்தி கல்லூரியை மீட்டார். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பைகளில் ஜெயலலிதா படம் இருந்தது. ஏழை எளிய மக்கள் பணம் வீணாக கூடாது, ஜெயலலிதா படம் இருந்தாலும் பரவாயில்லை அந்த பைகளை மாணவர்களுக்கு வழங்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். ஆனால், அதே நேரத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, வண்ணத் தொலைகாட்சி பெட்டிகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் இருந்ததால், அதனை மக்களுக்கு வழங்காமல் மக்கள் பணத்தை வீணடித்தனர். இதன் மூலம் தற்போதைய முதலமைச்சருக்கு காழ்புணர்ச்சி இல்லை என்பதை அதிமுக உறுப்பினர் கே.பி.அன்பழகன் புரிந்து கொள்ள வேண்டும்,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.