சென்னை: காஷ்மீரின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில், சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றுவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மருத்துவ சுற்றுலாவில் வந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் சென்னையில் பாகிஸ்தான் நாட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்களா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் நுரையீரல், இருதய பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக சென்னை வந்துள்ளார் என்பதும், அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவலும் தெரிய வந்தது. பாகிஸ்தான் இளைஞர் ஒரு மாதத்துக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிசிக்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்து பார்த்திராத தண்டனை.. கோபத்தில் கர்ஜித்த மோடி!
தற்போது அந்த இளைஞருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முறையான விசா உள்ளிட்ட அனுமதியுடன் பெற்றோர் ஒருவருடன் வந்த அந்த இளைஞர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் பெஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதன் மூலம் பாகிஸ்தான் இளைஞர் சென்னை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு சார்பில் மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "சிகிச்சையில் இருக்கும் பாகிஸ்தான் இளைஞரை மத்திய அரசு திருப்பி அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டால், மருத்துவமனை நிர்வாகம் அதற்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் இருக்கும் இளைஞர், வென்டிலேட்டர் உதவியுடன் தான் அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட முடியும். மருத்துவமனையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பெற்றும் தகவல் மத்திய வெளியுறவுத் துறையின் வசம் உள்ளது. எனினும், இதுவரை எங்களுக்கு மத்திய அரசின் தரப்பில் இருந்து, அந்த நோயாளியை திருப்பி அனுப்ப வேண்டும் என்று எந்தவித உத்தரவும் வரவில்லை," என்று கூறினர்.
"பாகிஸ்தானில் இருந்து மருத்துவச் சுற்றுலாவின் கீழ் முறையான விசாவுடன் அனுமதி பெற்று, தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த இளைஞரை திருப்பி அனுப்புவது அவரது உடல் நலனில் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்,"என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.