விழுப்புரம்: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வப் பயிலும் வட்டம் என்ற இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் சேர்ந்து பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு அரசு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
முதன்முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் போட்டி தேர்வு மையம் சிறப்பாக செயல்படுவதை அறிந்து 1999ம் ஆண்டு தமிழகத்தில் இருக்கும் அனைத்து வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியது. தன்னார்வப் பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வேலைவாய்ப்பு பயிற்சி துறையே ஏற்பாடு செய்கிறது. தேவைக்கு ஏற்ப மாதிரித் தேர்வுகளையும் நடத்துகிறது. இது போன்ற இலவச பயிற்சி மையத்தில் இருந்தும் ஏராளமானோர் அரசு வேலைக்கு சென்றுள்ளனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ''தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள GROUP IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி 2025 முதல் (திங்கள் முதல் வெள்ளி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த பயிற்சி வகுப்பிற்கான தேர்வு 22.04.2025 காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த பாடவாரியான தேர்வுக்கு கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் நகலுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஊழல் கொடி பறக்க யார் காரணம்? ஜெயக்குமார் பேச்சால் பரபரப்பு!
இந்த தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.'' என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்