கோயம்புத்தூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை மண்டல பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை சத்தியமங்கலம் சாலை குரும்பபாளையம் பகுதி தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்ரல் 26) தொடங்கியது. முதல் நாளான இன்று ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சார்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசும் போது, ''பூத் ஏஜெண்டு பயிற்சி என்றாலே ஓட்டு சம்மந்தமாக இருக்கும். ஆனால் இது ஓட்டுக்காக இல்லை. ஆட்சி அதிகாரம் என்றாலே ஓட்டு தான். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்யப் போகிறோம்? இதுவரை செய்தது போல நாம செய்யப் போவது கிடையாது.
ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களின் நலனுக்காகத் தான். மக்களிடம் ஓட்டு வாங்குது மட்டும் இந்த கருத்தரங்கின் நோக்கம் கிடையாது. ஆனால் நாம் மக்களுடன் எப்படி தொடர்பில் இருப்பது? என்பது குறித்து கலந்தாலோசிப்பது தான் நோக்கம். இதற்கு முன்பு எத்தனையோ பேர், மக்களிடம் பொய்களை பேசி ஆட்சியை பிடித்திருக்கலாம். அதற்காக நான் இங்கு வரவில்லை. இனிமேல் அதெல்லாம் நடக்காது. நடக்க விடப்போவதும் கிடையாது.

நம்ம கட்சி மேல் மக்களிடம் பெரிய நம்பிக்கையை கொண்டு வரப் போவது நீங்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் வந்துள்ளோம்? எதற்கு வந்துள்ளோம்? உங்களுக்கு என்ன அனுபவம் உள்ளது? என்று மக்கள் கேட்பார்கள். எப்படிப்பட்ட ஆட்சியை அமைப்போம்? என்று மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
ஆனால், உங்களுடைய திறமை எப்படிப்பட்டது? என்பது எனக்கு தெரியும். நம் மனதில் நேர்மை உள்ளது. கறைப்படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை, லட்சியம், பேசுவதற்கு உண்மை, திறமை, அர்ப்பணிப்பு குணம் ஆகியவை உள்ளன. களம் உள்ளது. போய் கலக்குங்க. வெற்றி நிச்சயம்.'' என்று பேசினார்.
இதையும் படிங்க: 'கூடா நட்பு கேடா போகும்'; 1999-ல் நீங்கள் கொண்ட நட்பு என்ன? கூட்டணி குறித்து வெடித்த விவாதம்!
முன்னதாக காலை 11 மணி முதல் முகவர்கள் வர துவங்கி இருந்த நிலையில் மாலை 4 மணி வரை முகவர்கள் வந்தனர். இதற்கிடையே வாக்குச்சாவடி முகவர் அடையாள அட்டை இருந்தும் பலரை அனுமதிக்கவில்லை என்று கூறி வாக்குச்சாவடி முகவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
காயம் அடைந்த தவெக பொதுச்செயலாளர்
இரண்டாவது நுழைவு வாயில் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூத் ஏஜெண்டுகளை பொதுச் செயலாளர் ஆனந்த் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது தடுப்பில் இருந்து கம்பியில் மாட்டி அவரது பேண்ட் கிழிந்ததோடு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. காலில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.
கட்சியினரால் 10க்கும் மேற்பட்டோர் காயம்
காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்த விஜய்க்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து வேனில் விஜய் செல்லும் போது அவருக்கு முன்பும், பின்பும் இருசக்கர வாகனங்களில் வந்த ரசிகர்கள் மற்றும் கட்சியினர் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கியதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மரத்தில் ஏறிய தொண்டர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தவெக தலைவர் விஜய் தங்கியிருந்த ஓட்டல் முன்பாக ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். கருத்தரங்கு நடைபெறும் அரங்கத்திற்குள் வந்த விஜய் சுமார் 3 நிமிடம் உரையாற்றினார். விஜய் பேசுவதற்கு முன்பு ரசிகர்கள் மரத்தின் மீது ஏறி உள்ளே வர முயன்ற போது அவர்களை எச்சரிக்கை செய்து மரத்திலிருந்து கீழே இறங்க செய்தது குறிப்பிடத்தக்கது.