மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தில், சாமுவேல், ராமகிருஷ்ணன், ஜெகன் ஆகிய 4 மீனவர்களும் ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டுக் கரை திரும்பிக் கொண்டிருந்தபோது, மற்றொரு பெரிய படகு அவர்களை வழிமறித்துள்ளது. அதிலிருந்த 3 கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்கள் மீது கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதலை நடத்தினர்.
அதில் படுகாயமடைந்த மீனவர்கள் கோடியக்கரை படகு துறைமுகத்திற்கு நேற்று (ஏப்ரல் 17) அதிகாலை வந்து சேர்ந்தனர். அப்பகுதி மக்கள் மீனவர்களை மீட்டு கோடிக்கரை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு நிகழ்வு: இதற்கிடையே, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் கோடியக்கரைக்கு வடக்கே 16 கடல் மைல் தொலைவில் கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி உள்ளிட்ட நான்கு பேர் நேற்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதையும் படிங்க: வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி! |
அப்போது, கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து, படகிலிருந்த ஒரு இஞ்சின், 30 கிலோ மீன்கள், இரண்டு செல்ஃபோன் பேட்டரிகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதையடுத்து, அந்த மீனவர்களின் படகில் பெட்ரோல் குறைவாக இருந்ததால், கரை திரும்ப முடியாமல் தவித்த வந்தனர். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவரிடம் எரிபொருள் வாங்கி உபயோகித்து அதன் பின்னரே அவர்கள் கரை திரும்பினர்.
இதையடுத்து, ஒரே நாளில் இருவேறு இடங்களில் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோரக் காவல்படை போலீசார் இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது, அடையாளம் தெரியாத கடற்கொள்ளையர்கள் 6 பேர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 309(6) -ன் கீழ் வேதாரண்யம் கடலோரக் காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.