சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணைவேந்தர்கள் மாநாடுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை சனாதன மாநாடாக மாற்ற ஆளுநர் ரவி முயற்சிப்பார் என அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு அனுப்பி வைத்த உயர்கல்வி தொடர்பான மசோதாக்களை நிறுத்தி வைத்தற்காக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் குட்டு வைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை நிறுத்தி வைக்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என நீதிமன்றம் சரமாரியாக கேள்வியு் எழுப்பி இருந்தது.
அத்துடன், ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒப்புதலும் அளித்தது. மேலும், மசோதாக்களை இனி நிறுத்தி வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஆளுநருக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்ட இந்த தீர்ப்பை அடுத்து, ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்று துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். டெல்லி பாஜக தலைமையின் வழிகாட்டுதலின் பேரிலேயே, இந்த செயல்களில் ஆளுநர் ஈடுபடுவதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநரின் இந்த துணைவேந்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பு , கல்வித் துறையில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் சிந்தனை செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அனைத்து மரபுகளையும் முற்றிலும் மீறும் வகையில் துணை வேந்தர் மாநாட்டை தற்போது ஆளுநர் கூட்டி இருப்பது சட்ட விரோதம்.
கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெய் ஶ்ரீராம் என மத கோஷம் போட்டவர் ஆளுநர் ரவி. அதேபோல,அவர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினால், அதனை சனாதன மாநாடாகவே மாற்ற முயற்சிப்பார். பிற்போக்கான கருத்துக்களை பரப்பும் ஆளுநரின் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என சிந்தனைச்செல்வன் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.