- By இரா.சிவக்குமார்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் செல்லும் சாலையில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வி.பெருமாள்பட்டி எனும் அழகிய கிராமம். மிகச் செழிப்பான மண். சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் சாதிப் பிணக்குகள் ஏதுமின்றி மக்கள் அனைவரும் மிக ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். கடந்த காலங்களில் மது போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்களாலும், பட்டாசு வெடிப்புகளாலும் ஏற்பட்ட பாதிப்புகளை இன்றும் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், குடியால் இறந்து போனவர்களால் வி.பெருமாள்பட்டி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைம்பெண்களாக உள்ளனர்.

எனவே, இப் பழக்கங்களை இனியும் தொடர விடுவது ஊருக்கு நல்லதல்ல என நினைத்து, கடந்த சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கிராம சபையைக் கூட்டி ஊரில் உள்ள அனைவரின் சம்மதத்துடன் ஊருக்குள் மது அருந்துவதற்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஊரின் மந்தை என அழைக்கப்படும் பொதுமேடையில் வீற்றிருக்கும் விருமாண்டி உள்ளிட்ட தெய்வங்களின் சாட்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எப்பாடுபட்டாவது நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற உணர்வு ஊரிலுள்ள ஒவ்வொருவரிடமும் வைராக்கியம் கொண்டுள்ளது.

'இளைஞர்கள் முன்னேற்றம் பாதிக்கிறது'
அவ்வூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கர்ணன் கூறுகையில், ''ஊரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை இயற்றியுள்ளோம். ஊரில் மதுக் கடைகள், மது விற்பனை அல்லது போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் மட்டுமன்றி மது விற்பனையாளர்களும், மதுப்பிரியர்களும் இதற்கு முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.

மதுவுக்கு எதிராக எங்கள் கிராமம் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் முன்னுதாரணமாக நாங்கள் பார்க்கிறோம். தற்போது மதுபோதையால் இளைஞர்கள் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களின் முன்னேற்றமும், குடும்பத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. பலமுறை இதற்காக முயற்சி செய்து, தற்போது ஊர்த் திருவிழா முடிவடைந்த இந் நேரத்தில் கிராம சபையைக் கூட்டி தீர்மானமாகக் கொண்டு வந்துள்ளோம்.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் அரசின் உயர் பதவிகளில் உள்ளனர். உசிலம்பட்டி வட்டாரத்திலேயே முதல் பட்டதாரி எங்கள் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் தான். ஆகையால் போதையின் பாதையில் இந்த ஊர் செல்வதை இனியும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்கள் கிராமத்தைப் பின்பற்றி மற்ற ஊர்களிலும் மதுபோதை பழக்கத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்' என்றார்.
வெடியால் கை, கால் இழக்க வேண்டிய நிலை
அதே ஊரைச் சேர்ந்த வீரத்தேவன் கூறுகையில், 'திருமணம், காது குத்து, கோயில் திருவிழா, இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பட்டாசுகள் வெடிப்பது மிக அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஊர் மந்தையில் வெடிக்கப்படும் பல்வேறு விதமான பட்டாசுகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். முறைமைக்காரர் முத்தையா கண் இழந்தார். அதே போன்று சிவா என்பவர் வெடியால் கை, கால் இழக்க வேண்டிய நிலை. ரூ.3 லட்சம் செலவழித்தும் கூட இன்னும் அவர் குணமாகவில்லை. இது போன்று இன்னும் பலர் உள்ளனர்.

ஆகையால் அதற்காகவே இந்த பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். தீபாவளியானாலும் கூட மத்தாப்பு போன்ற பாதிப்பில்லாத பட்டாசு ரகங்களை அவரவர் வீட்டு முன்பு வெடித்துக் கொள்ள மட்டும் அனுமதியளித்துள்ளோம். மீறுவோர் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும். மீண்டும் தொடர்ந்தால் ஊர் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளோம்' என்றார்.
குடிக்கு அடிமை
மது போதைப் பழக்கத்தைப் போன்றே வெடிச் சம்பவங்களும் இந்த ஊரில் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது என்பதை அங்குள்ள மக்களிடம் பேசும் போது உணர முடிந்தது. அதிலும் குறிப்பாக இந்தத் தீர்மானங்களை பெண்கள் அதிகம் வரவேற்றுள்ளனர். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 200 பேர் குடிநோயாளிகளாக மாறியுள்ளனர் என்பதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். அதே போன்று குடியால் இறந்து போனவர்களால் கைம்பெண்கள் வி.பெருமாள்பட்டி கிராமத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் கூறினர்.
பெண்கள் நிம்மதி
அவ்வூரைச் சேர்ந்த பெரிய முத்துச்சூடி என்ற மூதாட்டி கூறுகையில், 'நல்லது கெட்டதுக்கு இவர்கள் போடுகின்ற வெடிகளால் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை இனி செய்யக் கூடாது என்று கொண்டு வந்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால சந்ததிகள் நன்றாக வாழ வேண்டும். அதே போன்று குடிப் பழக்கத்துக்கு ஆளான நபர்கள், மந்தையில் படுத்துக் கொண்டு பெண்களை, பெரியவர்களை இழிவாகப் பேசுவது வருத்தமாக இருந்தது. அதனையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறோம்' என்றார்.
மாற்று ஏற்பாடுகள்
மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றும் முன்பு வீடு வீடாகச் சென்று, ஊரின் முக்கிய நபர்கள் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் ஒப்புதல் பெற்றுத் தான் இதனை சாத்தியமாக்கியுள்ளனர். மேலும், மது விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்த சில குடும்பத்தார் தற்போது பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தரவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக பாலுச்சாமி என்ற ஊர்ப் பெரியவர் கூறுகிறார். மேலும் அவர், இதற்கு தமிழக அரசின் சார்பிலும் தேவையான மறுவாழ்வு முயற்சிகளை மது நோயாளிகளுக்கும் உருவாக்கித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.
தொடக்கக்கல்விக்கு மக்கள் உதவி
ஊரை பல்வேறு வகையிலும் மேம்பட்டதாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு இயங்கி வரும் இவ்வூரைச் சேர்ந்த பிரமுகர்கள், தற்போது ஊரின் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு நடைமுறைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கள்ளர் சீரமைப்புத் துறையின் வாயிலாக உயர்நிலைப் பள்ளியைக் கொண்டு வந்துள்ளனர். அதற்கான கட்டுமான உதவிகளை அரசு மேற்கொண்டிருந்த போதும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஊர் மக்களின் ஒத்துழைப்பில் மேற்கொண்டுள்ளனர். தற்போது தொடக்கக்கல்விக்கு என தனியாக கட்டடம் கட்டப்பட்டு, விரைவில் திறப்பு விழா காண உள்ளது. ஊரை மிகச் சுத்தமாகப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
'கிராமம் முன்னணியில் உள்ளது'
தொடர்ந்து பேசிய ஐ.ராஜா, 'ஊரில் நாங்களே நிலம் வாங்கிக் கொடுத்து, தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவும், பிறகு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தியுள்ளோம். தற்போது ரூ.3.5 கோடி நிதி பெற்று ஸ்மார்ட் கிளாஸ் ரூம், உயர்நுட்ப ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளோடு பள்ளியை உருவாக்கியுள்ளோம்.
பிளாஸ்டிக் ஒழிப்பை மையமாகக் கொண்டு மஞ்சள் பை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். ஊருக்குள் எங்கும் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மாணவ, மாணவியருக்கு அரசு தருகின்ற உதவித் தொகையைப் பெற்றுத் தருவதில் எங்கள் கிராமம் முன்னணியில் உள்ளது. பெண்கள் உயர்கல்வி கற்கும் வகையில் தேவையான வழிகாட்டுதலையும் செய்து வருகிறோம்' என்றார்.
வி.பெருமாள்பட்டி கிராமத்தை மது போதையற்ற, பட்டாசு, நெகிழி பயன்பாடற்ற கிராமமாக உருவாக்கும் கனவு இருந்தாலும், டிஜிட்டல் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதும் இங்குள்ள பொதுமக்களின் நோக்கமாக உள்ளது. ஆகையால் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக இதனைச் செய்து காட்டுவோம் என்பதிலும் உறுதி காட்டுகின்றனர் வி.பெருமாள்பட்டி மக்கள்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்