சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு வரும் 25,26 ஆம் தேதிகளில் உதகையில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புில், 'தமிழ்நாட்டில் உள்ள மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தொடர்ந்து 4வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
துணைவேந்தர்கள் மாநாட்டில் தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவது, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி ஒத்துழைப்புகள், கற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சிக்கு முக்கியதுவம் அளிப்பது, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, காப்புரிமையை உருவாக்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்களை உருவாக்குவதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்களும், கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன. கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள உள்னனர்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம்: சரியான முடிவை அரசு எடுக்கும் - அமைச்சர் உறுதி!
'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எல்லைகள்' என்ற தலைப்பில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் உரையாற்ற உள்ளார்.
மத்திய , மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கல்வி சூழலில் உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வது உள்ளிட்ட அம்சங்களை நோக்கமாக கொண்டு துணைவேந்தர்களின் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.' என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் கடந்த 19-ம் தேதி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மாளிகையில் மாதக்கணக்கில் நிலுவையில் இருந்த மசோதாகளுக்கு அனுமதி வழங்குவதாக உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த மசோதாக்களில், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு அளிக்க வகை செய்யும் மசோதாவும் ஒன்று. இத்தகைய சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.