ஈரோடு: 'சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் தருவேன்' எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் தீ குண்டம் விழா இன்று (ஏப்ரால் 8) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பாதுகாப்பாக, சிறப்பாக இருக்க வேண்டும் என பண்ணாரி அம்மனிடம் வேண்டினோம்.
குண்டம் திருவிழா தொடர்பான செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் அனுமதித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நான் பேசுகிறேன். வரும் காலங்களில் செய்திகளை கொண்டு சேர்க்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.
நீலி கண்ணீர் வடிக்க்கும் முதலமைச்சர்:
தொடர்ந்து, வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என்பது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக வெற்றிப் பெற்றால் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரையிலும் சிலிண்டருக்கான மானியத்தை வழங்காமல் முதலமைச்சர் நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்பது வேதனைக்குரியது. எனவே, அவர் கொடுத்த சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் என்ற வாக்குறுதியை தாய்மார்களுக்காக நிறைவேற்ற வேண்டும்." என்று எல்.முருகன் தெரிவித்தார்.
ொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்து கேள்விக்கு, பதிலளிக்காமல் சிரித்தபடி அவர் சென்றார்.
