சென்னை: மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 'சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற திட்டத்தின் மூலம் பள்ளிகளின் மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், ஆசிரியர்கள் பயிற்சி, மலை வாழ் பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும் கல்வி கிடைப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய அரசு 'பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்' திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஜன்மன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரதமர் ஜன்மன் திட்டம் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம், கல்வி நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் 1,000 விடுதிகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் இடங்களின் விவரத்தையும் ''PM Gati Shakti'' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 24 ந் தேதி நடைபெற்றது. அதில் பிஎம் ஜன்மன் திட்டதிற்கு 18 மாநிலங்கள் தங்களின் திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. அதன் அடிப்படையில் தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டம் 2024-25 முதல் 2028-29 வரையிலான காலகட்டத்தில் 1,000 விடுதிகளைக் கட்ட வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தபட்டு வருகிறது.
2024ம் ஆண்டில் திட்டதிற்கு அனுமதி அளிக்கும் குழுவின் கூட்டத்தில் முதல் கட்டமாக 304 விடுதிகள் பரிந்துரைக்கப்பட்டன. 2025-26 ஆம் ஆண்டிற்கான திட்ட அனுமதி வழங்கும் குழுவின் கூட்டத்தின் போது, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, 19 மாநிலங்களிலிருந்து 419 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
அப்போது நடந்த விவாதத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் வழங்கப்பட்ட தரவு ''GATI SHAKTI '' போர்ட்டலுடன் பொருந்தாத முன்மொழிவு ஒப்புதலுக்கு பரிசீலிக்கப்படவில்லை. இதனால், முன்மொழிவுகளை ஒப்புதலுக்கு பரிசீலிக்கக்கூடிய வகையில், போர்ட்டலில் உள்ள தரவைப் புதுப்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. அதேபோல, 3 நாட்களுக்குள் இடம், இணைக்கப்பட்ட பள்ளி போன்றவற்றில் ஏதேனும் மாற்றத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து மணிப்பூர், அசாம், குஜராத் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அனைத்து திருத்தப்பட்ட முன்மொழிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 2025-26 நிதியாண்டில் DAJGUA-வின் 2வது கட்டத்தில் 18 மாநிலங்களில் 300 விடுதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் அனுமதிக்கப்பட்ட மொத்த மதிப்பு ரூ.111 கோடி 40 லட்சம் ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையொப்பம் போடாமல் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ரூ.2,057 கோடி நிதியை சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு தர வேண்டிய நிலையில், நடப்பாண்டில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டத்திற்கும் புதியதாக அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்