சேலம்: ஊழல் முறைகேடு குறித்து பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனிடம் போலீசார் நடத்திய இரண்டு நாள் விசாரணை நிறைவடைந்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தன்னிச்சையாக பூட்டர் பவுண்டேஷன் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடர் புகாரை எழுப்பி வந்தனர். இது தொடர்பாக சேலம் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நேற்றும், இன்றும் துணை வேந்தரிடம் விசாரணை நடைபெற்றது. இதனால் அவர் ஊட்டியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி நடத்திய துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை. ஆனாலும் அவரது பிரதிநிதியாக பல்கலைக்கழக முனைவர்கள் யோகானந்தன், பிரகாஷ் ஆகியோர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதற்கு பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கண்டனம் தெரிவித்து உள்ளார். "தமிழக உயர்கல்வித்துறை துணைவேந்தர் ஜெகநாதனின் பிரதிநிதிகளாக பங்கேற்ற இருவர் மீது பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் பட்டியல் இன ஆசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: 100-க்கும் மேற்பட்ட 'கைம்பெண்கள்'... கிராமம் எடுத்த அதிரடி! 'சபாஷ்' போட வைக்கும் தீர்மானம்! |
இது தொடர்பாக பேராசிரியர்கள் கூறுகையில், "சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பட்டியலின தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் பேராசிரியர் இளங்கோவனை, சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக வழக்கு பதியப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்றும், இன்றும் சேலம் சூரமங்கலம் காவல் துறை விசாரணைக்கு உள்ளாகி விசாரணை வலையத்திற்குள் துணைவேந்தர் சிக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துணை வேந்தர் பட்டியலின கல்வியியல் துறை பேராசிரியை தனலட்சுமிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய துறைத் தலைவர் பதவியை, அவரை விட இளையவரான வக்கீல் என்பவருக்கு வழங்கி உள்ளார். இது பட்டியலினத்தவரை அவமதிக்கும் செயலாகும். மூத்த பேராசிரியையாக உள்ள கல்வியியல் துறை பேராசிரியை தனலட்சுமியை துறைத் தலைவராக நியமிக்காதது ஏன்" எனவும் பேராசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் பேசிய அவர்கள், "துணை வேந்தர் ஜெகனாதனை காவல் துறை மற்றும் நீதிமன்றம் வரை கொண்டு சென்ற பட்டியலினத்தை , பழிவாங்க முடிவு செய்துள்ளதன் காரணமாகவே பட்டியலினத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கல்வியியல் துறைத் தலைவர் பதவியை வழங்க அவர் மறுத்து வருகிறார். பட்டியலின பேராசிரியை தனலட்சுமிக்கு வழங்காமல் அவரை விட இளையவர் பேராசிரியர் வக்கீலுக்கு வழங்கியது கண்டனத்திற்குரியது. தொடர்ந்து துணை வேந்தரின் பட்டியலின விரோத நடவடிக்கையை ஏற்க முடியாது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு பட்டியலினத்திற்கு வழங்க வேண்டிய கல்வியியல் துறைத் தலைவர் பதவியை வழங்கிட வேண்டும்" என பேராசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.