சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் இரட்டை யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்த வழக்கில் அக் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்திய போதே, அதில் 2 யானைகள் இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை விஜய் பயன்படுத்தி இருப்பதாக பலர கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், தவெக கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன், பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும் அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் யானை சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார். மேலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட யானை சின்னம் அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே தேர்தல் சின்னமாக வழங்கப்படுவதாக வாதிட்டார்.
ஆனால், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் யானைகள் இடம் பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது எனவும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் வாதிட்டார்.
ஏற்கனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பிய போது, தமிக வெற்றிக் கழகம் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தாகவும் வழக்கறிஞர் ஆனந்தன் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் ஏப்ரல் 29 ம் தேதிக்குள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.