சென்னை: தொழிலாளர் நலத்துறை, சாம்சங் தொழிற்சங்கத்தினர், சாம்சங் நிறுவனம், இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மே 12ஆம் தேதி நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் - சாம்சங் நிறுவனத்துக்கும் இடையே பிரச்னைகள் நீடித்து வருகின்றன. தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையம்- சாம்சங் நிறுவனம் - தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கோரிக்கை நிராகரிப்பு: தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் முதலில் சாம்சங் நிறுவனத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சாம்சங் நிறுவனத்தினர் தொழிலாளர் நல துறையுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து தங்கள் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர்.
அவர்களின் பதிலைப் பெற்று அதனை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையருக்குத் தெரிவித்தனர். சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனம் கூறும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்தனர். இந்த பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கம் வைத்த கோரிக்கை எதையும் சாம்சங் நிறுவனம் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாததால் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம்! அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன்,"சாம்சங் நிறுவனம் எல்லா விதமான சட்ட விரோத நடவடிக்கையிலும் தொடர்ந்து ஈடுபடுகிறது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் வைத்த கோரிக்கையை குறித்து நிறுவனம் பேச மறுத்த காரணத்தினால் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
ஊதியத்தில் 9 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் இப்போது எங்கள் சங்கத்தை ஒழிக்க அவர்களுக்கு வேண்டியவர்களைக் கொண்ட கோஷ்டியைப் பலப்படுத்த ரூ.18000 தருகிறோம். நீங்கள் இந்த அமைப்பில் கையெழுத்து போட வேண்டும் என்று கையெழுத்து வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். அதன் மூலமாக எங்களது சங்கத்தை பலவீனப்படுத்தவும், அவர்கள் விரும்பும் அமைப்பைப் பலப்படுத்த விரும்புகின்றனர்.
பிரித்தாளும் சூழ்ச்சி: இரண்டாவதாக, 23 சங்க நிர்வாகிகளைப் பணியிடை நீக்கம் செய்திருக்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொருவராக இடை நீக்கம் செய்து கொண்டிருக்கின்றனர். ஒருபக்கம் பழிவாங்கல் நடவடிக்கை, மற்றொரு பக்கம் பணத்தாசை காட்டுவது, கையெழுத்து வாங்குவதன் மூலம் சிறுமைப்படுத்துதல் என இவை அனைத்துமே தொழில் தகராறுச் சட்டத்திற்கு விரோதமானது. இதை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ரூ.18000 தருகிறேன் என்று சொல்கிறார்கள். அதைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள், அதுதான் எங்களது கோரிக்கை. அதையும் அவர்கள் ஏற்கவில்லை. தொழிலாளர் துறையும் நாங்கள் கேட்பது நியாயம்தானே என்று சொல்கின்றனர். ஆனால் நிறுவனம் மறுத்து வருகிறது. பேச்சுவார்த்தையைக் மதிக்காமல் தான் சாம்சங் நிறுவனம் நடந்து கொள்கிறது.
கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என நிறுவனம் மறுத்துவிட்ட காரணத்தால் எங்களால் சமரசம் செய்து வைக்க இயலவில்லை. அதனால் சமரச முயற்சித் தோல்வி அடைந்துவிட்டது என்று தொழிற் தகராறு சட்டத்தின்படி அறிக்கை தரவேண்டும். அந்த அறிக்கை அரசுக்குப் போகும். அரசு எங்களின் கோரிக்கையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நீதிமன்றம் அந்த கோரிக்கையின் மீது தீர்ப்புத் தரும். எண்களைப் பொறுத்தவரைத் தீர்வு வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்திற்குச் செல்வோம்,"என்றார். இந்த நிலையில் மே மாதம் 12ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சாம்சங் நிறுவனத்தினருக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.