மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறையில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சௌந்தரராஜன், மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின்போது ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லறை வணிகம் பாதிக்கப்படுவது, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வணிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழக அரசு சொத்து வரியை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனித்தனியாக பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் உயர்த்தி கட்ட சொல்கிறது. 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது.
ஒவ்வொரு நகராட்சியிலும் சொத்து வரியை மறுமதிப்பீடு செய்கிறோம் என்றும் அரசு கூறுகிறது. உதாரணமாக 9 ஆயிரம் ரூபாய் வரி கட்டியவர்கள் ஒரு லட்சத்து 5000 ரூபாய் வரை வரி கட்ட கூடிய கணக்கு ஒவ்வொரு நகராட்சியிலும் வேறுபடுகிறது. இது எந்த கணக்கு என எங்களுக்கும் தெரியவில்லை. பொதுமக்களுக்கும் தெரியவில்லை. உடனடியாக தமிழக முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி சொத்து வரியினை ஒரு சீரான முறையில் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல 650 ரூபாய் என்று இருந்த கடைகளுக்கான வணிக உரிமத்தை 3500 ரூபாய் என்று தமிழக அரசு உயர்த்தியது. இதனை குறைக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கடந்த 17.3.2025 அன்று தமிழக அரசு 1200 ரூபாயாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டதால் வணிகர்களால் வணிக உரிமத்தை புதுப்பிக்க முடியவில்லை. அபராதம் இல்லாமல் வணிக உரிமத்தை புதுப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லறை வணிகம் சீரழிந்து கொண்டிருப்பதை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று சொத்து வரி பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி தமிழக அரசு சீரமைக்காவிட்டால் வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி சென்னை அருகே படப்பையில் நடைபெற உள்ள எங்களின் 42 ஆவது மாநாட்டிற்கு பின்பு, தமிழகம் தழுவிய போராட்டம் அறிவிக்கக் கூடிய நிலையில் இருக்கிறோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: குடிநீரில் கலந்த கழிவுநீர்? சிறுமி உள்பட இருவர் உயிரிழப்பு; மேயரின் விளக்கம் கேட்டு 'அதிர்ந்த மக்கள்'!
ஜிஎஸ்டி வரி விதிப்பை 8 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் அனுப்பி உள்ளோம். எல்லா பொருளுக்கும் ஒரே சதவீத வரி என்பதை கொண்டு வர வேண்டும் என்பதை தமிழ்நாடு வனிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தும். ஆன்லைன் வர்த்தகத்தால் அழிந்து கொண்டிருக்கும் சில்லறை வர்த்தகத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.'' என்று சௌந்தர்ராஜன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்